"கேவலம்".. வெட்கங்கெட்ட கம்மிகள்.. திமுகவை இழுத்து, கதர்களை சீண்டி, "தோழர்களுக்கு" செக் வைத்த பாஜக
தமிழக பாஜக, திமுகவையும், காங்கிரஸையும் சீண்டி, கம்யூனிஸ்ட் கட்சியை சீண்டி உள்ளது
சென்னை: திமுகவையும், காங்கிரஸையும் சீண்டி, கம்யூனிஸ்ட் கட்சியை அட்டாக் செய்துள்ள தமிழக பாஜக.. இது தொடர்பாக ஒரு ட்வீட்டையும் பதிவிட்டுள்ளது.
கேரளாவில் தங்கக் கடத்தல் விவகாரம் தலைதூக்கி உள்ளது.. அம்மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், ஃபைசல் பரீத் உள்ளிட்ட 15 பேர் கைதாகி விட்டனர்.
ஸ்வப்னா சுரேஷ், தகவல் தொடர்புத் துறை செயலராகவும், பினராயி விஜயனின் முதன்மைச் செயலராகவும் இருந்த சிவசங்கருடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்ததையடுத்து விவகாரம் விஸ்வரூபமெடுத்தது..
திமுக வெர்சஸ் பாஜக இல்லை.. அதிமுகதான்.. அண்ணாமலைக்கு ஓபிஎஸ் பதிலடி.. அப்போ 2024 கூட்டணி?
விஸ்வரூபம்
இதனால், அம்மாநில எதிர்க்கட்சிகள் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர்.. ஆனால், தங்கம் கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது என்று பினராயி விஜயன் ஏற்கனவே திட்டவட்டமாக சொல்லி இருந்தும், இந்த வழக்கு மீண்டும் பூதாகரமாகியுள்ளது... ஜாமீனில் வெளியே வந்த ஸ்வப்னா, தங்கம் கடத்தலில் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்ததுடன், ஆடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தது ஒட்டுமொத்த கேரளாவையும் உலுக்கி எடுத்தது.
கறுப்பு கொடிகள்
இதனால் பினராயி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.. எதிர்க்கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.. பினராயி செல்லுமிடெல்லாம் சாலை மறியல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.. கருப்புக்கொடிகள் காட்டப்படுகின்றன.. தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போலீசாரும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்து வருகின்றனர்.. இதனால் பெரும் பரபரப்பில் அந்த மாநிலம் காணப்படுகிறது.
கோட்டயம்
மற்றொருபக்கம் பினராயி தன் கருத்தில் தெளிவாக இருக்கிறார்.. நேற்றுகூட கோட்டயத்தில் பினராயி பேசும்போது, "சிலர் என்னை மிரட்ட பார்க்கிறார்கள்.. அதெல்லாம் வீண் முயற்சியே... கடந்த முறை சட்டசபை தேர்தலுக்கு முன்புகூட இப்படித்தான் என் மீது வீண் புகார்கள் எழுந்தன.. ஆனால் உண்மை என்ன என்பது மக்களுக்கு தெரியும்.. அதனால்தான் சிறப்பான வெற்றியை தந்து, இன்று ஆட்சியில் உட்கார வைத்துள்ளனர்.. குற்றச்சாட்டுகள் கூறுவதால் போராட்டத்தில் ஈடுபடுவதால் எனக்கோ, அரசுக்கோ எந்த வகையிலும் பாதிப்பு இல்லை.. உண்மையை கண்டறிய இந்த அரசு பாடுபடும்" என்று கூறியிருந்தார்.
எரிச்சல்
இது எதிர்க்கட்சிகளுக்கு மேலும் எரிச்சலூட்டி வருகிறது.. ஹரியானா, திரிபுரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வளர்ச்சியடைந்த பாஜகவால் கேரளாவில் வளர முடியாமல் போகிறது.. இதற்கு 90 சதவிகித கல்வியறிவு பெற்ற மக்கள் கேரளாவில் உள்ளனர்., அவர்களது சிந்தனை வேறுவிதமாக இருக்கிறது, அவர்களின் அரசியல் கணக்கு என்பதே வேறு, அதனால்தான் பாஜகவால் கேரளாவில் கால் ஊன்ற முடியவில்லை என்ற பொதுவான காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன.
திருப்பதி நாராயணன்
எனினும், கடந்த 3 நாட்களாகவே, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவை பினராயியை பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.. ஸ்வப்னா விவகாரத்தை வைத்து, கம்யூனிஸ்ட் ஆட்சியை டேமேஜ் செய்யவும் முனைப்பு காட்டி வருகின்றன.. இது தமிழகத்திலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது... பாஜக துணை செயலாளர் திருப்பதி நாராயணன் இதை வித்தியாசமான முறையில் கண்டித்துள்ளார்.. கேரளா கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சிக்க, திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளையும் லிஸ்ட்டில் கொண்டு வந்துள்ளார்.
ரோஷம்
இது தொடர்பாக ஒரு ட்வீட்டையும் பதிவிட்டுள்ளார்.. அந்த ட்வீட்டில், "கம்யூனிஸ்ட் முதல்வர் பினராயி விஜயன் ஊழல் மற்றும் தங்க கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கியிருப்பது வெட்கக்கேடானது. இதை விட ஒரு மாநிலத்திற்கு வேறு என்ன கேவலம் இருக்க முடியும்? தி மு க கூட்டணியிலிருந்து வெட்கங்கெட்ட கம்மிகளை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்துமா? அல்லது தி மு க கூட்டணியில் கம்மிகள் நீடித்தால் கூட்டணியிலிருந்து விலகுவோம் என்று தமிழக காங்கிரஸ் ரோஷம் கொள்ளுமா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
நறுக் கேள்வி
ஏற்கனவே, பேரறிவாளன் விஷயத்திலும் காங்கிரஸை இப்படித்தான் பாஜக தூண்டிவிட்டது.. அதிலும் குஷ்பு இதை பற்றி நறுக்கென ஒரு கேள்வி கேட்டிருந்தார்.. "பேரறிவாளனை தமிழக முதல்வர் கட்டித்தழுவி வரவேற்கிறார். ஆனால் இதில் பாஜக அரசியல் விளையாட்டு விளையாடுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு துளியாவது அவமானம் இருந்தால் இந்த விவகாரத்தை காரணம்காட்டி திமுக உடனான கூட்டணியை முறித்துக்கொள்ள தயாரா?" என்று கேள்வியை எழுப்பியிருந்தார்.. இந்நிலையில், கேரள விவகாரத்திலும், காங்கிரஸிடம் இதே கேள்வியை எழுப்பி உள்ளது தமிழக பாஜக..!