திருப்பூரில் 'அந்த' 1 சம்பவம்.. ஹாயாக உட்கார்ந்து, கேஷூவலா வேட்பாளர்கள் செய்த காரியம்.. தமிழகம் ஷாக்
சென்னை: திருப்பூரில் நடந்த ஒரு அரசியல் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தபோது ஏற்பட்ட சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பங்கேற்ற நிகழ்ச்சியில் வேட்பாளர்களின் நடத்தை சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.. NDA கூட்டணி வேட்பாளர்களின் இந்த வீடியோவை எதிர்க்கட்சிகளும், சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே திருப்பூரில் என்ன நடந்தது?
தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாநிலப் பாடலாக அறிவித்து, அது பாடப்படும்போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்பது அடிப்படை விதியாகும்.. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணையை 2021ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

தமிழ்த்தாய் வாழ்த்து சிறப்பு
ஒரு வழக்கின் விசாரணையின் போது, தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு துதிப்பாடல் மட்டுமே என்பதால் அதற்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிமன்றம் தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து, அந்த நிலையை மாற்றவும் மாநிலப் பாடலுக்கு உரிய உயரிய மரியாதையை நிலைநாட்டவும் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இதன் மூலம், மாற்றுத்திறனாளிகளைத் தவிர மற்ற அனைவரும் அரசு விழாக்களிலும், கல்வி நிறுவனங்களிலும் இப்பாடல் இசைக்கப்படும் போது எழுந்து நின்று மரியாதை செலுத்துவது சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர் என்டிஏ வேட்பாளர்கள்
இந்நிலையில், திருப்பூரில் நடந்த சம்பவம், தற்போதைய அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. திருப்பூர் திருமுருகன் பூண்டி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தொழில் துறையினருடன் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கலந்துரையாடும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வரவிருக்கும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிவேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. திருமுருகன் பூண்டி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கலந்துகொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியின் தொடக்கமாகத் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள்.
ஹாயாக உட்கார்ந்து, கேஷூவலாக ஸ்நாக்ஸ்
ஆனால், மேடைக்கு பின்புறம் இருந்த பகுதியில் அமர்ந்திருந்த அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள், தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்துக் கொண்டிருந்த வேளையில் அதற்கு எவ்வித மரியாதையும் அளிக்காமல், நாற்காலியில் ஹாயாக உட்கார்ந்தவாறு, கேஷூவலாக ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்களாம்..
தமிழக அரசின் நெறிமுறைப்படி மாநிலப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்பது விதியாக உள்ள நிலையில், பொறுப்பான பதவிகளில் போட்டியிடும் வேட்பாளர்களே இவ்வாறு அலட்சியமாக செயல்பட்டது நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறதாம்.
வைரலாகும் வீடியோ
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மதிப்பளிக்காமல் வேட்பாளர்கள் ஹாயாக ஸ்னாக்ஸ் சாப்பிட்ட இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை எதிர்க்கட்சிகளும் ஷேர் செய்து, என்டிஏ வேட்பாளர்களை விமர்சித்து வருகிறார்கள்..
தமிழின் பெருமையை நிலைநாட்டச் சட்டங்கள் இயற்றப்பட்டு வரும் சூழலில், பொதுவெளியில் வேட்பாளர்களின் இத்தகைய பொறுப்பற்ற நடத்தை சமூக ஆர்வலர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களிடையேயும் கடும் விமர்சனங்களை எழுப்பி வருகிறது.












Click it and Unblock the Notifications