போய் முதலமைச்சரிடம் கேளுங்க; எனக்குத் தெரியாது; விவசாயிகளிடம் கைவிரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி!
சென்னை: உயர்மின் கோபுரம் அமைக்கும் விவகாரத்தில் கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றத் தவறுவதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் திருப்பூர் ஈசன் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
விளைநிலங்களில் அமைக்கப்படும் உயர்மின் கோபுரத்துக்கு பதில் சாலை வழியாக கேபிள் பதிப்போம் என்ற திமுகவின் வாக்குறுதி குறித்து கேட்கச் சென்ற போது அமைச்சர் செந்தில்பாலாஜி பொறுப்பற்ற முறையில் பதிலளித்ததாக தெரிவித்துள்ளார்.
முதல்வர் வாக்குறுதி கொடுத்தால் நீங்கள் அவரிடமே போய் கேட்டுக்கொள்ளுங்கள் என்றும் அதைப்பற்றி தனக்குத் தெரியாது என அமைச்சர் செந்தில்பாலாஜி கைவிரித்துவிட்டதாக ஈசன் புகார் கூறியிருக்கிறார்.

உயர் மின் கோபுரம்
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதற்கு மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இப்போது அவரது தலைமையிலான ஆட்சியிலேயே அந்த பணிகள் தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது முதலமைச்சரின் முழு ஒப்புதலோடு தான் நடைபெறுகிறதா அல்லது அவரை குழப்பம் அடைய வைத்து அமைச்சர் செந்தில்பாலாஜியின் தன்னிச்சையான நடவடிக்கைகளால் இந்தப் பணிகள் தொடர்கிறதா என விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

திருப்பூர் ஈசன்
இந்த விவகாரம் குறித்து ஒன் இந்தியா தமிழிடம் பேசிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் திருப்பூர் ஈசன், ''கடந்த அதிமுக ஆட்சியில் என்ன செய்தார்களோ, அதையே தான் திமுக ஆட்சியிலும் செய்கிறார்கள். விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு பதில் கேபிள் வழியாக மின் தடத்தை கொண்டு செல்வோம் என்றார்கள், நாங்களும் இதை முழுமையாக நம்பினோம். ஆனால் இப்போது நடப்பது அதற்கு நேர்மாறாக உள்ளது.''

10 முறை சந்திப்பு
''திமுக ஆட்சி அமைந்தபிறகு எத்தனையோ போராட்ட வழக்குகளை வாபஸ் பெற்றுவிட்டார்கள், ஆனால் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீதான வழக்குகளை மட்டும் இன்னும் வாபஸ் பெறவில்லை. இதேபோல் இந்த விவகாரத்தில் விவசாயிகள் அடங்கிய குழு அமைத்து ஆலோசனைகள் கேட்கப்படும் என திமுக வாக்குறுதி கொடுத்தது. அதையும் இப்போது செய்யவில்லை. இது தொடர்பாக பேச அமைச்சர் செந்தில்பாலாஜியை ஒரு முறை இரண்டு முறை அல்ல 10 முறை அவரை தேடிச்சென்று சந்தித்திருக்கிறோம்.''

அமைச்சர் கோபம்
''முதல்வர் உறுதி கொடுத்தது பற்றி எனக்குத் தெரியாது, அவர் உங்களுக்கு வாக்குறுதி கொடுத்திருந்தால் அவரை போய் பாருங்க. முதலில் கிளம்புங்க எனக் கூறி எங்களை விரட்டியடிப்பதிலேயே குறியாக இருந்தார். கடந்த மாதம் 22-ம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜி எங்கள் மீது கோபப்பட்டதால் நாங்கள் வருத்தத்துடன் அவர் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டோம்.''

முதல்வரை சந்திக்க
''விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பது குறித்தும், அமைச்சர் செந்தில்பாலாஜியின் அணுகுமுறை பற்றியும் முதலமைச்சரிடம் நேரில் முறையிடுவதற்காக அவரிடம் நேரம் கேட்டு காத்திருக்கிறோம்'' என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் திருப்பூர் ஈசன் விவரித்து முடித்தார்.












Click it and Unblock the Notifications