கண் பார்வை பறிபோகும்! அடுத்த நொடி உயிரே போகும்! திருவள்ளூரில் 7 பேர் பலி! அமோனியா கேஸ் ஆபத்தானது ஏன்
சென்னை: திருவள்ளூரில் உள்ள உணவு பதப்படுத்தும் நிலையத்தில் அமோனியா வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் உடல்நல பாதிப்பு காரணாமக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த அமோனியா வாயு கசிவு ஏன் ஆபத்தானது.. இது எப்படி நொடிகளில் மனித உயிரை பறிக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
திருவள்ளூரை அடுத்த பெரியபாளையத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. தனியர் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த தொழிற்சாலையில் இன்று எதிர்பாராத விதமாக அமோனியா வாயுக் கசிந்ததால் 50க்கும் மேற்பட்டோர் பேருக்கு மயக்கம் ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். உயிருக்கு போராடுவோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

விபத்து
இந்த விபத்திற்கு என்ன காரணம் என்பது தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், தொழிற்சாலையில் உள்ள குளிரூட்டும் சிஸ்டத்தில் ஏற்பட்ட திடீர் கசிவு காரணமாக இந்த நச்சு வாயு காற்றில் பரவி, அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களை நிலைகுலையச் செய்தது. வாயு கசிவு ஏற்பட்டவுடன் அந்தப் பகுதி முழுவதும் ஒருவிதமான நெடி பரவியதால் மக்கள் பீதியடைந்தனர். உடனடியாக மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பதையும், இயந்திரங்களில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறுகள் இருந்ததா என்பதையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
அமோனியா வாயு
அமோனியா வாயு என்பது பொதுவாக தொழிற்சாலைகளில், குறிப்பாக உணவுப் பொருட்களைப் பதப்படுத்தும் குளிரூட்டும் இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் ஒரு கெமிக்கல் ஆகும். இது நிறமற்றது என்றாலும் மிகவும் காரமான மற்றும் மூக்கைத் துளைக்கும் மணம் கொண்டது. காற்றில் இதன் அளவு அதிகரிக்கும் போது, அது மனித உடலுக்குப் பெரும் தீங்கினை விளைவிக்கிறது. இது ஏன் இவ்வளவு ஆபத்தானது என்பதை நாம் விரிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
என்ன நடக்கிறது!
அமோனியா வாயு மனித உடலில் உள்ள ஈரப்பதத்துடன் மிக வேகமாக வினைபுரியும் தன்மை கொண்டது. நமது கண்கள், மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரலில் எப்போதும் ஈரப்பதம் இருக்கும். அமோனியா வாயுவை நாம் சுவாசிக்கும்போது, அது இந்த ஈரப்பதத்துடன் சேர்ந்து 'அம்மோனியம் ஹைட்ராக்சைடு' எனும் அரிப்புத் தன்மை கொண்ட காரமாக மாறுகிறது. இது உடலின் மென்மையான திசுக்களைச் சுட்டெரித்து கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த வாயுவைச் சுவாசிக்கும்போது, அது சுவாசப் பாதையில் கடுமையான வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் நுரையீரலில் நீர் கோர்த்துக் கொள்வது போன்ற நிலை ஏற்பட்டு, ஆக்சிஜன் பரிமாற்றம் தடைபடுகிறது. இதன் விளைவாகப் பாதிக்கப்பட்டவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சில நிமிடங்களிலேயே மரணம் நிகழ வாய்ப்புள்ளது. காற்றில் அமோனியாவின் செறிவு அதிகமாக இருக்கும்போது, ஒரு சில நொடிகள் அதைப் சுவாசிப்பதே உயிருக்கு ஆபத்தாக முடிந்துவிடும்.
ஆபத்து
கண்களில் இந்த வாயு பட்டால், அது கருவிழியைப் பாதித்து நிரந்தரக் கண் பார்வையின்மையை ஏற்படுத்தக்கூடும். அதேபோல், தோலில் பட்டால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் அரிப்புகளை உண்டாக்கும். இத்தகைய விபத்துகளைத் தவிர்க்க தொழிற்சாலைகளில் முறையான பாதுகாப்புத் தணிக்கைகள் செய்யப்பட வேண்டும். தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதோடு, அவசர காலங்களில் எவ்வாறு வெளியேற வேண்டும் என்ற பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும். அமோனியா கசிவு என்பது வெறும் விபத்து மட்டுமல்ல, அது மனித உயிர்களை நொடியில் பறிக்கும் ஒரு நச்சு அபாயம் என்பதை உணர்ந்து செயல்படுவது அவசியமாகும்.












Click it and Unblock the Notifications