நாளை மறுநாள் வரை டைம்.. திமுக எடுக்கும் முக்கிய முடிவு.. டிகேஎஸ் இளங்கோவன் சஸ்பென்ஸ்
சென்னை: சட்டமன்ற தேர்தலில் தவெக தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 தொகுதிகள் அவர்களிடம் இல்லை. காங்கிரஸ் கட்சி மட்டுமே தவெகவுக்கு ஆதரித்துள்ளது. சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்எல் கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியுள்ளது. அதிமுக சார்பில் தாங்கள் ஆட்சியமைப்பதற்கு திமுகவிடம் மறைமுக ஆதரவு கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக நாளை மறுநாள் முக்கியமான முடிவு எடுக்கும் என்று டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தினசரி பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. தவெகவுக்கு மெஜாரிட்டி இல்லை என்பதால் அவர்களை ஆட்சியமைக்க அழைக்க முடியாது என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்நாத் அர்லேக்கர் கூறிவிட்டார். மேலும் பெரும்பான்மையுடன் எந்த கட்சி வந்தாலும் ஏற்க தயார் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் திமுக - அதிமுக கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. இதனால் தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.

திமுக முக்கிய முடிவு
இந்நிலையில் திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "எங்கள் திட்டம் குறித்து எந்த முடிவும் செய்யவில்லை. திமுக நாளை மறுநாள் வரை காத்திருக்கும். விஜய் ஆட்சியமைக்க முடியாவிட்டால் திமுக முடிவை மறுபரிசீலனை செய்யும். விஜய்யின் தவெக ஆட்சியமைப்பதற்கு ஆளுநர் வருகிற 10 ஆம் தேதி வரை நேரம் கொடுத்துள்ளார். அதுவரை காத்திருப்போம். 10 ஆம்தேதிக்கு பிறகு நாங்கள் முடிவு செய்வோம்.
எல்லாவற்றையும் பொறுத்து தான் கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவு செய்வோம். தற்போது தவெக ஆட்சியமைப்பதற்கான முயற்சியில் உள்ளது. அவர்களால் முடியவில்லை என்றால் மட்டுமே அடுத்தகட்டம் குறித்து முடிவு செய்ய முடியும். அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. இப்போதே அதைப்பற்றி எந்த முடிவும் எடுக்க முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications