நடிகர்களுக்கு ரூ.1 கோடி கொடுத்த உதயநிதி, மாற்றுத்திறனாளிகளை கவனிக்கலையே.. தமாகா யுவராஜா தாக்கு!
சென்னை: நடிகர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை தந்த உதயநிதி ஸ்டாலினின் கருணைப் பார்வை, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் பக்கம் திரும்புமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் எம். யுவராஜா.
தமிழக அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், நடிகர் சங்கத்திற்கு 1 கோடி வழங்கினார். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் பல ஆண்டுகளாக நிதி நெருக்கடி காரணமாக தாமதமாகி வரும் நிலையில், கட்டிடம் கட்ட உதவுவதற்காக தனது சொந்தப் பணத்தில் இருந்து ரூபாய் 1 கோடி வழங்கியுள்ளார். இந்நிலையில், நடிகர் சங்கத்திற்கு 1 கோடி வழங்கும் உதயநிதி ஸ்டாலின், கடந்த சில நாட்களாக இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு கோரி போராடி வரும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பக்கம் தனது கருணைப் பார்வையை திருப்பாதது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் எம். யுவராஜா.

இதுதொடர்பாக, யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு தமிழ் சினிமாவின் முன்னாள் நடிகரும் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் உரிமையாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார்.
நடிகர் சங்கத்திற்கு நடிகர் விஷால் பொதுச் செயலாளராக பதவியேற்றதில் இருந்து நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது தொடர்பாக பேசப்பட்டு வருகிறது. அப்போதெல்லாம் நன்கொடை பற்றி பேசாத உதயநிதி ஸ்டாலின் தற்போது விஜய்யின் அரசியல் அறிவிப்பிற்கு பிறகு நன்கொடை தர முன்வந்தது ஏன்? தற்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால் திரைப்படத் துறையை சேர்ந்த நடிகர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் அவர்கள் பக்கம் போய்விடக்கூடாது என்ற நோக்கத்திற்காகத் தான் தனது சொந்த பணத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயை உதயநிதி வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு சிறு, குறு திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட முடியாமல் சிரமப்படுகின்றனர். பல படங்கள் திரையரங்கையே அடைவதில்லை. அதற்கு மிக முக்கிய காரணம் உதயநிதி ஸ்டாலினும் அவர் குடும்பத்தார் வசமுள்ள ரெட் ஜெயன்ட் மூவிஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் என்று கூறப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு முன்பு இதே போலதான் திரைப்படத்துறை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
வாரம்தோறும் இரண்டு மூன்று திரைப்படங்களை இந்த நிறுவனங்கள் வெளியிட்டு வந்தன. ஒட்டுமொத்தமாக திரையுலகத்தை தன் கட்டுப்பாட்டிலும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்பட விநியோகிஸ்தர்கள் என அனைவரும் இன்று திமுக ஆட்சியின் கீழ் ஒரு பயத்தில் உள்ளனர். உதாரணத்திற்கு கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் வெளியிட முடியாமல் சிரமப்பட்ட போது அந்தப் படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலமாகத்தான் வெளியிடப்பட்டது. இதன் பிரதிபலனாக கமலஹாசன் திமுக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து தற்போது எம்.பி சீட் கூட பெற இருக்கிறார்.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த மூன்று நாட்களாக பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு வேண்டும் என போராடி வருகின்றனர். இதற்கெல்லாம் ஏன் உதயநிதி ஸ்டாலின் மனம் உருகவில்லை? இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், பார்வை இழந்த மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் 4% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் எத்தனையோ பணியிடங்கள் காலியாக உள்ளன.
மாற்றுத்திறனாளிகள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் அவர்களை அழைத்து பேசக் கூட மறுக்கிறார். இது போன்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு அவசியம் வழங்க முன்வர வேண்டும் அது பற்றி உதயநிதி ஸ்டாலின் ஏன் வாய்திறக்க வில்லை?
சென்னை மற்றும் தூத்துக்குடி பகுதியில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டு மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்ட போது கூட தமிழக அரசின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதிக்கப்பட்ட அளவிற்கு நிதி உதவிகள் வழங்கப்படவில்லை. காவிரி நீர் வராததால் 3 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் தஞ்சை தரணியில் காய்ந்துள்ளன. அதற்கு உரிய நிவாரணம் கூறி விவசாயிகள் போராடி வருகின்றனர். அதையும் இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஏன் உதயநிதி ஸ்டாலின் முன்வரவில்லை?
நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதி வழங்குவது தவறில்லை. ஆனால் அதே சமயத்தில் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர். நடிகர், நடிகைகள், நாடக நடிகர்கள் பலர் வயது முதிர்ந்து பென்ஷன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் கணக்கெடுத்து உரிய பென்ஷனை வழங்க உதயநிதி ஸ்டாலின் ஏன் முன்வரவில்லை? ஒலிம்பியாட் மற்றும் கேலோ போன்ற பிரம்மாண்டமான விழாக்களை நடத்தினால் மட்டும் போதாது. ஏராளமான இளைஞர்கள் கிராமப்புறங்களில் போதிய வாய்ப்பின்றி விளையாட்டுகளில் பிரகாசிக்க முடியாமல் உள்ளனர் அவர்களை கண்டறிந்து உதயநிதி ஸ்டாலின் உரிய வாய்ப்பு வழங்க ஏன் முன்வரவில்லை?.
அரசு துறைகளில் உள்ள ஏராளமான பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்களே இல்லை என்ற நிலை நிலவுகிறது அதையெல்லாம் சரிசெய்ய உதயநிதி ஸ்டாலின் ஏன் முன்வரவில்லை? 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து அதை காற்றில் பறக்கவிட்டு அதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கக்கூடிய திரைத்துறைக்கு மட்டும் தானாக முன்வந்து உதவி செய்வது சரியா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் யுவராஜ்.
Download











Click it and Unblock the Notifications