உலகெங்கும் அமைதி தவழட்டும்! வளம் பெருகட்டும்! ஜவாஹிருல்லா தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து!
சென்னை: உலகெங்கும் அமைதி , வளம் பெருகட்டும் என தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லா.
பற்றி எரியும் மணிப்பூர் மக்களிடையே ஒற்றுமை நிலவவும், பாசிச சூழ்ச்சிக்குப் பலியாகி நிம்மதி இழந்து நிற்கும் அம்மக்களின் வாழ்வில் வசந்தம் வீசவும் பிரார்த்தனை செய்வோம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து வருமாறு;

''தியாகத் திருநாள் வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். கொடுங்கோலன் நம்ரூத்தின் அடக்குமுறைகளைத் துணிவுடன் எதிர்கொண்டு வென்ற இறைத்தூதர் இப்ராஹீம் மற்றும் அவரது அருமை மகனார் இஸ்மாயீல் ஆகியோரின் அரும்பெரும் தியாகத்தையும் இறைவனுக்கு அடிபணியும் ஒப்பற்ற தன்மையையும் நினைவு கொள்ளும் வகையில் தியாகத்திருநாள் உலகமெங்கும் வாழும் முஸ்லிம்களால் கொண்டாடப்படுகின்றது.
மேலும்,இறைத்தூதர் இஸ்மாயீல் தம் இளமைக் காலத்தில் எதிர்கொண்ட சோதனைகளை மனவுறுதியுடன் சந்தித்து சாதனை படைக்க உறுதுணையாக நின்றவர் அவரது அருமை அன்னை ஹாஜரா. கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல் அடக்குமுறைகளையும் சோதனைகளையும் எதிர்கொள்வதற்கு இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்வு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது, அன்னாரது குடும்பத்தினரின் தியாக வாழ்வியல் செயற்பாடுகளை பிரதிபலிக்கும் வகையில் தான் ஹஜ் கிரியைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இஸ்லாமிய நாட்காட்டியின் கடைசி மாதமான துல்ஹஜ் மாதம் 10 ஆம் நாள் தியாகத் திருநாளாக கொண்டாடப்படுகின்றது. தியாகத்திருநாளை கொண்டாடும் இத்தருணத்தில் கடந்த இரு மாதங்களாக பற்றி எரியும் மணிப்பூர் மக்களிடையே ஒற்றுமை நிலவவும், பாசிச சூழ்ச்சிக்குப் பலியாகி நிம்மதி இழந்து நிற்கும் அம்மக்களின் வாழ்வில் வசந்தம் வீசவும், இந்திய துணைக்கண்டத்தில் மாத்திரமல்லாமல் முழு உலகிலும் அமைதியும் வளமும் சுதந்திரமும் உரிமைகளும் மேலோங்குவதற்கும் பிரார்த்தனை செய்வோம்.''












Click it and Unblock the Notifications