11ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு முதல் ரத்து.. பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ஏன்?
சென்னை: தமிழகப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பிற்கான பாடங்களை நடத்தாமல், 12 ஆம் வகுப்பு பாடங்களை 2 ஆண்டுகள் நடத்துவதால், கல்லூரிகளில் மாணவர்கள் சிரமப்படுவதாக புகார்கள் வந்தது. இதையடுத்து தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 2017 - 18ஆம் கல்வியாண்டு முதல் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கொண்டுவரப்பட்டது. ஆனால் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைமுறை 2025-2026ஆம் கல்வியாண்டு முதல் நீக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பிற்கு நுழைவு தேர்வு இல்லாமல் இருந்தது. இந்நிலையில் 2017ம் ஆண்டு வாக்கில், நீட் தேர்வு அறிமுகம் ஆனது. அந்த காலக்கட்டங்களில் 12 ஆம் வகுப்பு பாடங்களை 2 ஆண்டுகள் நடத்துவதால் உயர்கல்வி படிக்க செல்லும் போது குறிப்பாக பொறியியல், மருத்துவம் படிக்கும் மாணவர்கள் முதலாம் ஆண்டில் தேர்ச்சி பெறுவது குறைவாக இருந்தது. அதன் அடிப்படையில் கல்வியாளர்களின் அறிவுரையின்படி 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த 2017-18ஆம் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட்டது. இதன்படியே ஒவ்வொரு ஆண்டும் கட்டாயமாக பொதுத்தேர்வும் நடத்தப்பட்டது. ஆனால் இந்த கல்வியாண்டில் இருந்து பொதுத்தேர்வு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறை அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில், 'கல்வித் துறையில் 5.11.1976 ஆம் ஆண்டில் வெளியிட்ட அரசாணையின்படி, தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வியில் 10+12+3 என்ற முறையினை நடைமுறைப்படுத்தி ஆணை வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து மார்ச் 1980 இல் முதல்முறையாக மாநில அளவில் (மேல்நிலை இரண்டாம்) 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை நடத்திட உத்தரவிடப்பட்டது.
அதன் பின்னர் 2017-2018ஆம் கல்வியாண்டு, மார்ச் 2018 முதல் 11 ஆம் வகுப்பு (மேல்நிலை முதலாம்) ஆண்டிற்கு பொதுத் தேர்வினை நடத்திட உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் பள்ளிக்கல்வி இயக்குநர், மாணவர்களின் நலன் கருதியும், பொதுத்தேர்வு தொடர்பான எவ்வித பதற்றங்களும் இல்லாமலும், மேல்நிலை கல்வியை உறுதியுடன் கற்பதற்காகவும், தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025னை செயல்படுத்தும் விதமாக, 2025-2026ஆம் கல்வியாண்டு முதல் (மேல்நிலை முதலாம் ஆண்டு ) 11ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வினை ரத்து செய்து கேட்டுள்ளார்.
அதன் அடிப்படையில், தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025 செயல்படுத்தும் விதமாக, 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் (மேல்நிலை முதலாம் ஆண்டிற்கான) 11 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் 11 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு, 2017-2018ஆம் கல்வியாண்டிற்கு முன்னர் இருந்த மாணவர்களுக்கு நடைமுறையை பின்பற்றி தேர்வு நடத்திட வேண்டும்.
2025-26 ஆம் கல்வியாண்டில் இருந்து, 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் முறையை மாற்றி, 12 ஆம் வகுப்பு அரசுப் பொது தேர்வு எழுதிய பின்னர் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை மட்டும் உள்ளடக்கிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

மேலும் ஏற்கனவே 11 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு மட்டும் மேல்நிலை முதலாம் ஆண்டிற்கான அரசுப் பொதுத் தேர்வினை அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதாவது மார்ச் 2030 வரையில் தொடர்ந்து நடத்துவதற்கு அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது" இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications