சட்டசபை தேர்தல்- ராமதாசுடன் அமைச்சர்கள் சந்திப்பு- பாமகவை தக்க வைக்க அதிமுக பகீரத பிரயத்தனம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவை தக்க வைக்கும் முயற்சியாக அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸை அமைச்சர்கள் கேபி அன்பழகன், தங்கமணி ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.
அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவித்தனர். அதிமுகவிடம் பாஜக 40 தொகுதிகளை கேட்டு வருகிறது. ஆனால அதிமுகவோ 20 தொகுதிகள் மட்டுமே தர முன்வந்துள்ளது.
இதனை நிராகரித்து வரும் பாஜக, அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட தேமுதிகவும் 40 தொகுதிகளை கேட்டு அடம்பிடிக்கிறது. அதேநேரத்தில் திமுகவுடனும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறப்படுகிறது.
மற்றொரு கூட்டணி கட்சியாக பாமகவோ, வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை வலியுறுத்தி அதிமுக அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் பாமகவை சமாதானப்படுத்தும் வகையில் அமைச்சர்கள் கேபி அன்பழகன், தங்கமணி இருவரும் தைலாபுரம் தோட்டத்துக்கு சென்று ராமதாஸை சந்தித்து பேசியுள்ளனர்.
அதிமுகவின் தேர்தல் பிரசார கூடத்தில் ராமதாஸ் பங்கேற்க வேண்டும் என்று இரு அமைச்சர்களும் அழைப்பு விடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தபோதும் பாமக தரப்பில் எந்த ஒரு சமிக்ஞையும் தரப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.