கியூட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய கோரி தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்
சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருவதை எதிர்த்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழக பட்ஜெட் கடந்த மாதம் 18 ஆம் தேதி தாக்கலானது. இதற்கு அடுத்த நாளே வேளாண் துறை பட்ஜெட் தாக்கலானது. இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்த நிலையில் இரு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று சட்டசபை மீண்டும் கூடுகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

கல்வியாண்டு
அதன் மூலமே வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகளில் நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு எதிராக தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வருகிறார்.

மாநில உரிமை
மத்திய அரசின் முடிவுக்கு எதிராக மாநில உரிமையை நிலைநாட்டும் வகையில் மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தனித்தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

பிளஸ் 2 தேர்வு
அந்த தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல் நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை என்பது ஏற்புடையதல்ல. நுழைவு தேர்வானது கல்வி முறையை ஓரங்கட்டிவிட்டு பயிற்சி மையங்களை நாட வேண்டிய தேவையை ஏற்படுத்திவிடும்.

கியூட் தேர்வு
கியூட் தேர்வினால் தமிழக மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை குறையும் என முதல்வர் தெரிவித்தார். இந்த தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசிவருகிறார்கள். தமிழக வாழ்வுரிமை கட்சி, கொமதேக மனிதநேய மக்கள் கட்சி, காங்கிரஸ், மதிமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்
இந்த தீர்மானத்தின் மீது பேசிய பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் , தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார். பின்னர் பாஜக உறுப்பினர்கள் 4 பேரும் வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் அதிமுக உட்பட பிற கட்சிகள் அனைத்துமே தனித்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரி சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications