வைகுண்டத்திற்கு வழி கேட்ட ஓபிஎஸ்... சிரித்த அப்பாவு - எ.வ.வேலு சொன்ன நச் பதில்
வைகுண்டத்திற்கு மட்டுமல்ல சிவலோகத்திற்கே அமைச்சர் சேகர்பாபு வழிகாட்டுவார் என்று சட்டசபையில் அமைச்சர் எ.வ. வேலு பதிலளித்துள்ளார்.
சென்னை: வைகுண்டத்திற்கு பாதை அமைக்க கிருஷ்ணபரமாத்மாவிடம் அனுமதி கேட்க வேண்டும் என்று எதிர்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம் கூற... அதைக்கேட்டு சபாநாயகர் அப்பாவு சிரித்தார். ஒபிஎஸ்க்கு பதிலளித்த எ.வ.வேலு, எங்கள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வைகுண்டத்திற்கு மட்டுமல்ல, சிவலோகத்திற்கே வழிகாட்டுவார் என்று கூறினார்.
தமிழக சட்டசபையில் சில நேரங்களில் அனல் பறந்தாலும் சில நேரங்களில் சுவாரஸ்யமான, ருசிகரமான சம்பவங்களும் நடைபெறும். இன்றைய தினம் கேள்வி நேரம் நேரலையில் முதல் முறையாக ஒளிபரப்பானது.
முதல்நாள் நேரலை என்பதால் சென்டிமெண்டாக முதல் கேள்வியை கருணாநிதி எம்எல்ஏ எழுப்பினார். அதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்தார். புதிய மாவட்டங்கள், கூட்டுறவு வங்கிகள் அமைப்பது பற்றி எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.

ஈஸ்வரன் எம்எல்ஏ
திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் பேசும் போது, ரயில்வே சுரங்கப்பாதையை திறந்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.கோழிக்கால் நத்தத்தில் இருந்து சேலம் கொச்சின் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கின்ற சாலை இந்த சாலை. இந்த சாலையில் உள்ள ரயில்வே கேட்டுக்களுக்கு சுரங்கப்பாதை போடப்பட்டுள்ளது. காஞ்சாம்புதூர் என்ற வைகுண்டத்தில் இருந்து அரை கிலோமீட்டருக்கு அருகில் மேட்டுக்காடு என்ற இடத்தில் முடிக்கப்பட்ட சுரங்கப்பாதை திறக்கப்படாமலேயே உள்ளது. அதை அமைச்சர் திறந்து வைக்க வேண்டும் என்று சொன்னார்.

பதில் சொன்ன எ.வ. வேலு
இது கோழிக்கால் நத்தம் வைகுண்டத்தை இணைக்கும் சாலை மட்டுமல்ல என்று சொன்ன அமைச்சர் ஈஸ்வரன், இது நாமக்கல் பகுதிகளில் இருந்து சேலம் கொச்சின் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கின்ற சாலை என்று சொன்னார்.
போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் சாலைகளை அகலப்படுத்த வேண்டும் என்றும் எம்எல்ஏ ஈஸ்வரன் கூறினார். திருச்செங்கோடு எம்எல்ஏவின் கேள்விக்கு பதில் சொன்ன அமைச்சர் எ.வ. வேலு உறுப்பினர் கோரிக்கைகள் பற்றி ஆலோசித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கிருஷ்ணரிடம் அனுமதி
இதனைத் தொடர்ந்து பேச எழுந்த ஓ.பன்னீர் செல்வம், சேலம் கோழிக்கால் நத்தம் வழியாக வைகுண்டத்திற்கு சாலை அமைக்க வேண்டும் என்று உறுப்பினர் ஈஸ்வரன் கேள்விக்கு அமைச்சர் பதில் கூறியிருக்கிறார். வைகுண்டத்திற்கு சாலை அமைக்க வேண்டும் என்றால் முதலில் கிருஷ்ணபரமாத்மாவிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி வாங்கிவிட்டீர்களா என்று அமைச்சர்கள் பதில் தர வேண்டும் என்றும் ஓபிஎஸ் கேட்டுக்கொண்டார்.

சேகர்பாபு வழி ஏற்படுத்துவார்
ஓபிஎஸ் பேச்சை கேட்டு சபாநாயகர் அப்பாவு சிரித்தார். புன்னகையோடு பதில் அளித்த அமைச்சர் எ.வ. வேலு, 17ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு சாலைப்பணிகள் நடைபெறுவதாக கூறினார். ஆன்மீகத்தில் திளைத்திருக்கிற அண்ணன் ஓபிஎஸ் வைகுண்டத்திற்கு எப்படி அனுமதிக்கப்படுமா என்று கேட்கிறார்கள். ஆன்மீகத்திற்கு என்றே போடப்பட்டுள்ள அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாவு ஐந்தரை மணிக்கே வைகுண்டத்திற்கு வழிகாட்டுவார். அறநிலையத்துறையின் மூலம் பல பணிகள் நடைபெற்று வருகின்றன. சிவலோகத்திற்கு போவதாக இருந்தாலும் வைகுண்டத்திற்கு போவதாக இருந்தாலும் வழிகாட்டும் பணிகளில் சேகர்பாவு ஈடுபட்டுள்ளார் என்று சிரித்துக்கொண்டே சொன்னார் எ.வ. வேலு. சட்டசபையில் சீரியசாக போன கேள்வி நேரத்தின் போது சில நிமிடங்கள் சிரிப்பலை எழுந்தது.












Click it and Unblock the Notifications