தப்பே செய்யலைன்னா எதுக்கு ‘முதல்வர்கள்’ அலறனும்? கெஜ்ரிவாலை முன்வைத்து ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை!
சென்னை: தவறே செய்யாதவர்கள் முதல்வர்கள் என்றால் ஏன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சனையில் அச்சத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று தம்ழிநாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
கெஜ்ரிவாலுக்கு சம்மன்: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. அமலாக்கத்துறை இன்று ஆஜராக வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் அமலாக்கத்துறை விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு சென்றுவிட்டார் கெஜ்ரிவால்.

மமதா பானர்ஜி கண்டனம்: அதேநேரத்தில் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பிய விவகாரத்தை "இந்தியா" கூட்டணி கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள், இன்று கெஜ்ரிவால்; நாளை தேஜஸ்வி யாதவ்; அதற்கு அடுத்து ஹேமந்த் சோரன்; பின்னர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் என நடவடிக்கைகள் பாயும் என அச்சம் தெரிவித்தனர். மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியதை விமர்சித்திருந்தார்.

அமலாக்கத்துறை மிரட்டல்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்றைக்கு நாட்டில் உள்ள நிலைமை எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும். ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா? மக்களாட்சி நீடிக்குமா? என்ற நிலையில்தான் இன்றைய சூழ்நிலை அமைந்திருக்கிறது. எதிர்க்கட்சிகளை மிரட்டுவது, மத்தியில் இருக்கக்கூடிய ஒன்றிய பிஜேபி ஆட்சி, தனக்கெதிராக யார் எந்த கருத்தைச் சொன்னாலும், அவர்களை மிரட்டுவது, அச்சுறுத்துவது, அதற்காக IT-ஐ, EDஐ அதாவது அமலாக்கத்துறையை, இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், தொலைபேசியை டேப் செய்கின்ற முயற்சியை கையாண்டிருக்கிறார்கள். ஆப்பிள் என்ற ஒரு பெரிய நிறுவனம், அந்த நிறுவனத்தைச் சார்ந்தவர்களே எச்சரித்திருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கெல்லாம் இதுபோல ஒரு சூழ்நிலை இருக்கிறது என்று அவர்களே சுட்டிக்காட்டியிருக்கிறார்கள், கடிதம் எழுதியிருக்கிறார்கள். இப்படி செய்தி வந்தவுடனே, ஒன்றியத்தில் இருக்கக்கூடிய அமைச்சர் என்ன பதில் சொல்லியிருக்கிறார், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும், விசாரணைக்கமிஷன் அமைக்கப்படும் என்று ஒரு அறிவிப்பு வெளியிடுகிறார். இது என்ன கேலிகூத்து என விமர்சனம் செய்திருந்தார்.

அண்ணாமலை விமர்சனம்: இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், மணீஷ் சிசோடியா விவகாரத்தில் அமலாக்கத்துறையிடம் ஆவணங்கள் இருக்கின்றன; சாட்சியங்கள் இருக்கின்றன. இதனை உச்சநீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் விவகாரத்தில் அதிகம் எனக்கு தெரியாது. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியதால் சில முதல்வர்கள் அதிர்ச்சி அடைந்து கருத்துகளை தெரிவிக்கின்றனர். நீங்கள் தவறு செய்யாமல் இருந்தால் எதற்காக இப்படி எல்லாம் அச்சத்துடன் கருத்து சொல்ல வேண்டும்? என கேள்வி எழுப்பி இருந்தார்.












Click it and Unblock the Notifications