திமுக அரசால் பொலிவை இழந்து நிற்கும் தமிழகத்தின் பெருமையை மீட்டெடுப்போம்.. அண்ணாமலை சொன்ன சேதி!
சென்னை: தெருவுக்குத் தெரு மதுக் கடைகளைத் திறந்து வைத்தும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தும், கையாலாகாத திமுக அரசால் தனது பொலிவை இழந்து நிற்கும் தமிழகம் தன் பெருமையை மீட்டெடுக்க உறுதியேற்போம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடந்த 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதன் அடிப்படையில் ஆந்திரா, கர்நாடக, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் நவம்பர் 1ஆம் தேதியை தத்தமது மாநில தினமாக கொண்டாடி வருகின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு, நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்ற 1968 ஜூலை 18 ஆம் தேதி அன்றைய முதல்வர் அண்ணா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். தன்படி ஜூலை 18 ஆம் தேதியே தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என 2022 ஆம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, ஜூலை 18 ஆம் தேதியன்று தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
எனினும், அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இன்றே தமிழ்நாடு நாளை கொண்டாடி வருகின்றன. இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இன்று தமிழ்நாடு நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நம் தமிழ் மொழிக்கான மாநிலமாக, இன்றைய எல்லைப் பகுதிகளோடு நம் மாநிலம் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தினமான இன்று, தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழக பாஜக சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மொழி வாரியாக மாநிலங்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு, குமரி முதல் சென்னை வரை தமிழ் மொழி பேசும் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்ட பெருமை மிகுந்த தினமான இன்று, தெருவுக்குத் தெரு மதுக் கடைகளைத் திறந்து வைத்தும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தும், கையாலாகாத திமுக அரசால் தனது பொலிவை இழந்து நிற்கும் தமிழகம் தன் பெருமையை மீட்டெடுக்க, உறுதியேற்போம்." என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications