யார் கிட்ட..பெட்ரோல் டீசல் மீதான தமிழக அரசின் வரி மத்திய அரசின் கலால் வரியை விட அதிகம்..அண்ணாமலை
சென்னை: பெட்ரோல், டீசல் மீதான தமிழக அரசின் மதிப்பு கூட்டு வரியானது (வாட் வரி) மத்திய அரசின் கலால் வரியை விட அதிகம்தான்; ஆகையால் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய கலால் வரியைத்தான் மத்திய அரசு குறைக்கிறது; அதுவும் 2014-ம் ஆண்டில் உயர்த்தப்பட்ட கலால் வரியில்தான் குறைத்துள்ளது மத்திய அரசு. இதனால் மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்புதான்; மத்திய அரசு தமக்குரிய பங்கு கிடைக்கும் செஸ் வரியைத்தான் குறைக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நிலைப்பாடு.

இழப்பு எப்படி வரும்?
இது தொடர்பாக அண்ணாமலை கூறியுள்ளதாவது: மக்களின் சுமைகளை குறைப்பதற்காக மத்திய அரசு தற்போது எரி பொருட்களின் மீதான வரியை இரண்டாவது முறையாக குறைத்துள்ளது. இதன் மூலம் முதல் முறையாக, தமிழக அரசின் மதிப்புக் கூட்டு வரி மத்திய அரசின் கலால் வரியை விட அதிகமாக இருக்கிறது. மத்திய அரசின் எரிபொருளின் மீதான கலால் வரியை விட அதிகமாக மாநிலம் கூடுதலாக வரியை வசூலிக்கும் போது வருவாய் இழப்பு எப்படி ஏற்படும்.

திமுக அரசின் வறட்டு கவுரவம்
கடந்த தேர்தலில் தான் சொன்ன வாக்குறுதியை மறந்து, பெட்ரோல் மீது 5 ரூபாய்க்கு பதிலாக வெறும் மூன்று ரூபாய் குறைத்து விட்டு டீசலுக்கு வாக்களித்த நான்கு ரூபாயில் ஒரு பைசா கூட குறைக்காமல் அறிவாலயம் திமுக அரசு மக்களை ஏமாற்றி விட்டது.
தமிழகம் தவிர்த்த இந்தியாவின் பிற மாநிலங்களில் எல்லாம் மத்திய அரசின் வரி குறைப்பு நடவடிக்கையை அடுத்து மாநில அரசும் விலையை குறைத்து மக்கள் நலனில் அக்கறை காட்டியன. ஆனால் அறிவாலயம் திமுக அரசு, தன் நியாயமற்ற நடத்தையைத் தொடர்கிறது. மக்கள் நலனை விட, மாநிலத்தின் நலனுக்கு மேலாகத் தன் வறட்டு கவுரவத்தைப் பெரிதாகக் கருதுவது வெட்கக்கேடானது.

இதுதான் நிலைமை
தமிழக அரசின் மதிப்புக் கூட்டு வரி மத்திய அரசின் கலால் வரியை விட அதிகமாக இருக்கிறது. மத்திய அரசு மாநிலங்களுடன் பகிரும், அடிப்படைக் கலால் வரியில் எந்த மாறுதலும் செய்யவில்லை. அதைத்தான் மாநில அரசுடன் பகிர்ந்து வருகிறது. ஆனால் கூடுதல் கலால்வரி விவசாய கட்டமைப்புக்கும், மற்றும் சாலை மேம்பாட்டுக்குமான வரித் தொகுப்புகள் திட்ட ஒதுக்கீடு நிதியாகக் கருதப்படுவதால், அதை மாநிலங்களின் திட்டங்களுக்காக மத்திய அரசு பயன்படுத்துகிறது. ஆகவே மாநிலங்களுடன் நேரடியாகப் பகிராத திட்ட ஒதுக்கீடு வரியில் மத்திய அரசு வரிக்குறைப்பு செய்துள்ளது.

திமுக போலி வேடம்
உண்மையை மறைத்து உத்தமர்கள் போல காட்டிக் கொள்ளும் திமுக அரசின் போலி வேடம் கலைகிறது. திமுக அரசு உடனடியாக பெட்ரோல் விலையை மேலும் 2 ரூபாயும், டீசலுக்கு 4 ரூபாயும் குறைப்பதன் மூலம் தன் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.மேலும், சமையல் காஸ் சிலிண்டருக்கு ரூ100 மானியம் வழங்கப்பட வேண்டும். மே 2020 இல் நிறைவேற்றப்பட்ட GOவை மாற்றியமைத்து, மாநில மதிப்புக் கூட்டு வரியை அடிப்படை விலையின் சதவீதமாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications