தமிழகத்திற்கு எதிராக களமிறங்கும் நிர்மலா சீதாராமன்.. என்ன செய்யப்போகிறது தமிழக பாஜக?
Recommended Video

சென்னை: பெரிய அதிர்ச்சியொன்றை பரிசளித்துள்ளார், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக கர்நாடக எம்.பி.க்கள் டிசம்பர் 27ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில், நடத்த உள்ள போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளார் அவர்.
நிர்மலா சீதாராமன், தமிழக பாஜகவின் முகமாக பார்க்கப்பட்டவர் என்பதை தாண்டி அவர் மத்திய அமைச்சர் என்பதையும் மறந்து இப்போராட்டத்தில் தமிழகத்திற்கு எதிராக களமிறங்கியுள்ளார்.
நிர்மலா சீதாராமன் கர்நாடகாவிலுள்ள லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிடையாது. எந்த மாநிலத்தில் இருந்து வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்பட கூடிய, ராஜ்யசபா எம்.பி.யாகத்தான் கர்நாடகாவில் இருந்து தெர்ந்தெடுக்கப்பட்டவர்.

கற்பனை செய்ய முடியவில்லை
நிலைமை இப்படி இருக்கும்போது, தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர், அதுவும் கூட காவிரி பாயும், திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவரான நிர்மலா சீதாராமன் கர்நாடகாவுடன் கை கோர்த்துக்கொண்டு, தமிழகத்திற்கு வரும் காவிரியை தடுக்க ஒரு அணை கட்ட ஆதரவு தெரிவித்துள்ளது என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. ஆனால், அதை செய்துள்ளார் நிர்மலா சீதாராமன். அவர் நினைத்திருந்தால் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் இருந்திருக்க முடியும். ஆனால், கூட்டத்தில் பங்கேற்றதோடு போராட்டத்திற்கு முகூர்த்தம் குறித்துள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக
டெல்லியில் இன்று மத்திய அமைச்சர் சதானந்தகவுடா தலைமையில், நடைபெற்ற கர்நாடக எம்.பி.க்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேகதாது அணையை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கட்டி முடிப்பது என்று பிடிவாதம் காட்டும் கர்நாடகா, அதற்கு வலு சேர்க்க எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டி போராட்டத்தை அறிவித்துள்ளது.

பச்சை அநியாயம்
புதிதாக எந்த ஒரு அணையை கட்ட வேண்டுமானாலும், தமிழகம் உட்பட சம்மந்தப்பட்ட 4 மாநிலங்களின் ஒப்புதலுடன்தான் செய்யவேண்டும் எந்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. இதை பச்சை அநியாயம் என்று குழந்தைக்கும் தெரிந்த விஷயத்திற்கு, மத்திய அமைச்சராக இருக்க கூடிய நிர்மலா சீதாராமன் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

கிள்ளுக்கீரையா
மேகதாது அணை கட்ட பூர்வாங்க ஆய்வுகளுக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதியளித்ததே துரோகம் எனும்போது, துரோகத்திற்கு வக்காலத்து வாங்கி நடக்கும் ஒரு அநியாய போாராட்டத்தில் நிர்மலா சீதாராமன் பங்கேற்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திற்கு எதிரான துரோகங்களால், பிரதமர் மோடியையே goback என்று சொன்ன தமிழகம், இனி நிர்மலா சீதாராமனை எப்படி எதிர்கொள்ளும் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்ன செய்யும் தமிழக பாஜக
தமிழகத்திற்கு எதிரான போராட்டத்தில் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ளவுள்ளதால், தமிழக பாஜகவினர் அதற்குப் பதிலடியாக போராட்டம் நடத்துவார்களா ? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம், உடனடியாக, நிர்மலா சீதாராமனுக்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவிக்குமா?
நிர்மலா சீதாராமன் நடவடிக்கைக்கு எதிராக அதிரடி பதிலடியாக தமிழிசை டெல்லியில் போய்ப் போராட்டம் நடத்துவாரா? இதன் மூலம், தமிழக பாஜக உயிர்ப்போடு உள்ளது என்பதை அவர் நிரூபிப்பாரா என்று அடுத்தடுத்த கேள்விகள் எழுகின்றன.

பாலைவனமாக்கும் திட்டம்
தமிழகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்போகும், நிர்மலா சீதாராமன், கஜா புயல் பாதித்த காவிரி டெல்டா மாவட்டங்களில் 2 நாட்கள் தங்கி பார்வையிட்டார். புயல் பாதித்த பல நாட்கள் கழித்துதான் என்றபோதிலும், இவரது வருகை பெரிதாக பேசப்பட்டது. ஆனால், அதே காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் திட்டத்திற்காக நிர்மலா சீதாராமன் வரிந்து கட்டி நிற்பதை பார்க்கும்போது, டெல்டா மீதான பாசம் வெறும் கண் துடைப்புதானா என்ற கேள்வி எழுகிறது. காவிரி டெல்டா மீது உண்மையான அக்கறை இருக்குமானால் இவர் மேகதாது அணை கூடாது என்று அல்லவா சொல்லியிருக்க வேண்டும்?

மத்திய அமைச்சராக நடுநிலை இல்லை
கர்நாடக ராஜ்யசபா எம்.பி. என்ற ஒரே காரணத்திற்காக, இவர் கர்நாடகத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்தால் மத்திய அமைச்சர் என்ற நடுநிலையுடன இருக்க வேண்டிய பொறுப்பிலிருந்து தவறுகிறார். சதானந்தகவுடாவும் அதே தவறைத்தான் செய்கிறார். குறைந்தபட்சம் அவர் லோக்சபா எம்.பி. பெங்களூர் வடக்கு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியவர். எனவே வேறு வழியின்றி இதை செய்வதாக எடுத்துக்கொண்டாலும், நிர்மலா சீதாராமனுக்கு இதற்கான அவசியம் என்ன வந்தது என்ற கேள்வி எழாமல் இல்லை. நிர்மலா சீதாராமனின் தமிழகத்திற்கு எதிரான செயல்பாட்டுக்கு, தமிழக பாஜக எப்படி பதிலடி கொடுக்கப்போகிறது? அனைவர் மனதிலும் இப்போது எழுந்துள்ள ஒரே கேள்வி இதுதான்.












Click it and Unblock the Notifications