பாஜக தலைவர் பதவி.. 10 ஆண்டுகள் உறுப்பினர் விதியால் அண்ணாமலை, நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல்?
சென்னை: பாஜக மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட கட்சியில் 10 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற விதியால் அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விதியால் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. புதிய தலைவருக்கான போட்டியில் நான் ரேஸில் இல்லை என்பதை அண்ணாமலையே சொல்லிவிட்டார். இதனால், அண்ணமைலையை மாற்றிவிட்டு வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

புதிய தலைவர் யார் என்றும் நான் கைகாட்ட போவதில்லை என்று அண்ணாமலை அறிவித்து இருக்கிறார். இதனால், புதிய தலைவராக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. புதிய தலைவர் பதவிக்கு வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சரத்குமார், பொன் ராதாகிருஷ்ணன், ஏபி முருகானந்தம் உள்ளிட்டோர் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.
விருப்ப மனு அளிக்கலாம்
பாஜக தலைவர் நியமனம் இந்த வாரத்திற்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனும் டெல்லி சென்று அக்கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே பாஜக தலைவருக்கான தேர்தல் அறிவிப்பு இன்று வெளியானது. தமிழக பாஜக தலைவர் பதவிக்கு நாளை(ஏப். 11) விருப்ப மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் மாநில துணைத் தலைவர் மற்றும் மாநில தேர்தல் அதிகாரி சக்ரவர்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பாஜக மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது. மேற்கண்ட தேர்தலுக்கான விருப்ப மனுக்களை கட்சியின் இணையதளமான www.bjptn.com என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
குறைந்தது 10 ஆண்டுகள் தகுதி
நாளை 11.04 2025 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்ப மனுவை மாநிலத் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மாநில தலைவருக்கான தேர்தல் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் படிவம் F பூர்த்தி செய்ய வேண்டும். மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும் மற்றும் குறைந்தது பத்து வருடங்கள் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலைக்கு வாய்ப்பு இல்லை?
10 வருடங்கள் என்ற விதியால் நயினார் நாகேந்திரன், சரத்குமார், அண்ணாலை உள்ளிட்டோர் பாஜக தலைவர் பதவிக்கு போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் அடுத்த தலைவராக நயினார் நாகேந்திரன் ஆக கூடும் என்று சொல்லப்படும் நிலையில், 10 ஆண்டுகள் என்ற விதியால் அவருக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதற்கிடையே, மாநில தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு திருத்தப்பட்டு மீண்டும் வெளியிடப்படலாம் என்று சொல்லப்படுகிறது. அப்போது இந்த 10 ஆண்டு நிபந்தனைகள் தளர்த்தப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.
புதிய தலைவர் யார்?
தற்போது தலைவராக இருக்க கூடிய அண்ணாமலை, பாஜகவில் இணைந்து 5 ஆண்டுகள் ஆகிறது. அதேபோல, தலைவர் பதவிக்கான ரேசில் முன்னணியில் இருப்பதாக சொல்லப்படும் நயினார் நாகேந்திரன் 8 ஆண்டுகளே ஆகின்றன. இதனால் இருவரும் தலைவர் பதவிக்கு போட்டியிட முடியாத நிலை உள்ளது. பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. எனவே நாளை விருப்ப மனு தாக்கல் செய்யப்போவதும் இல்லை என்று மாநில தலைவர் தேர்தல் குறித்து அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
அதே நேரத்தில் நயினார் நாகேந்திரனை பாஜக தலைவராக அண்ணாமலை கை காட்டவில்லை. மாறாக நயினார் நாகேந்திரன் புதிய பாஜக தலைவராக வந்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்துள்ளார். இந்த நிலையில் தான் தலைவர் பதவிக்கான நிபந்தனை மாற்றி அமைக்கப்பட்டு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி பார்த்தால் நயினார் நாகேந்திரனால் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது. இதனால், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஒருபுறம் வாய்ப்பு இருந்தாலும், தென்காசி புளியங்குடியை சேர்ந்த ஆனந்தன் அய்யாசாமி என்பவருக்கு வாய்ப்பு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
புதிய தலைவராக தென்காசி மாவட்டம் புளியங்குடி ஊரை சேர்ந்த தொழிலதிபரும், தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவருமான ஆனந்த் அய்யாசாமி என்பவர் தேர்வு செய்யப்பட இருப்பதாக பாஜகவில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications