சூத்திரன் பேச்சு: ஆ.ராசா மீது 1,000 ஸ்டேஷனில் புகார்-50 லட்சம் பேரிடம் கையெழுத்து- சொன்னது பாஜக!
சென்னை: மனுஸ்மிருதி குறித்த திமுக மூத்த தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான ஆ.ராசா விமர்சித்தது தொடர்பாக 1,000 காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 50 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் நடத்துவதாகவும் தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
"ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சநாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திராவிட முன்னேற்ற கழகமும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது"- இதுதான் ஆ.ராசா பேசியது.
திராவிடர் இயக்க மேடைகளில் காலந்தோறும் பேசப்பட்டு வருகிற கருத்து இது. இதற்கு ஆதாரமாக மனுஸ்மிருதியின் பக்கங்கள் எடுத்துக் காட்டப்பட்டும் இருக்கிறது. ஆனாலும் பாஜக, காங்கிரஸ் வலதுசாரிகள் வம்படியாக, இந்துக்களை அவமதிப்பு செய்துவிட்டார்; இந்துக்களை புண்படுத்திவிட்டார் என புலம்புவது தொடருகிறது.

எச்.ராஜாவின் 5,000 டார்கெட்
இந்நிலையில் காரைக்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, ஆ.ராசாவின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. உங்களுக்கு பாஜக, பிரதமர் மோடியை பிடிக்காமல் போனால் அவர்களைத்தான் விமர்சனம் செய்ய வேண்டும்; அதற்காக இந்துமதத்தை எதிர்ப்பது ஏன்? ஆ.ராசாவை திமுகவில் இருந்து வெளியேற்ற வேண்டும். இல்லை எனில் ஆ.ராசாவின் கருத்துகளை தாம் ஏற்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்க வேண்டும். இந்து மத உணர்வுள்ள ஒவ்வொரு இந்துவும் ஆ.ராசாவுக்கு எதிராக ஒவ்வொரு காவல்நிலையத்திலும் புகார் கொடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் குறைந்தபட்சம் 5,000 புகார்களாவது ஆ.ராசாவுக்கு எதிராக கொடுக்க வேண்டும் என்றார்.

இதுவரை 1,000 புகார்கள்
இதனைத் தொடர்ந்து சென்னையில் பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்துக்கள் தொடர்பாக ஆ.ராசா பேசிய கருத்து தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை வழிகாட்டுதல்படி தமிழகம் முழுவதும் புகார் மனு கொடுத்துள்ளோம். 1000 காவல் நிலையத்திற்கு மேல் புகாரளித்துள்ளோம். ஆன்லைனிலும் புகார் அளித்து வருகிறோம். பொதுமக்கள் கையெழுத்தை பெற்று முதலமைச்சரிடம் வழங்க உள்ளோம் , இன்று முதல் 3 நாள் கையெழுத்து இயக்கம் நடத்தி 50லட்சம் நபர்களிடம் கையெழுத்து பெற உள்ளோம். ஆ .ராசா, திமுகவிலிருந்து நீக்கப்பட வேண்டும் , கைது செய்யப்பட வேண்டும். தமிழக மக்களின் தன்மானம் காக்கும் கையெழுத்து இயக்கமாக இது நடக்க உள்ளது.

முதல் ஒப்புதலுடன் பேசுகிறாரா ஆ.ராசா?
முதலமைச்சர் இதுவரை கண்டனம் தெரிவிக்காதது வேதனை தருகிறது. முதல்வர் ஒப்புதலோடுதான் ஆ.ராசா பேசுகிறாரா என சந்தேகமாக இருக்கிறது. சபரீசன் கோயில்களில் யாகம் செய்கிறார் , கும்பாபிசேகம் நடத்துகிறார் என்ற எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு சரியானதுதான். ஆ.ராசா பேச்சு முதலமைச்சருக்கும் பொருந்தும். பெரும்பான்மை இந்துக்களின் வாக்கில்தான் ஆ .ராசா வென்றார் ; இந்து என்ற தகுதியில்தான் அவர் தேர்தலில் போட்டியிட்டார். திராவிடர் கழகத் தலைவர் வீரமணியை திருப்தி செய்வது முக்கியமா? தமிழக மக்களின் தன்மானம் முக்கியமா என முதல்வர் முடிவு செய்ய வேண்டும்.

கருணாநிதி நினைவு சின்னம்
பொதுவாக தலைவர்களுக்கு நினைவு சின்னம் அமைப்பது தவறில்லை. ஆனால் தமிழக அரசிடம் பணப் பற்றாக்குறை இருக்கும் நிலையில் கருணாநிதி நினைவுச் சின்னத்திற்கு கோடிகளை இந்த நேரத்தில் செலவழிக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தில் எல்லா நகரங்களிலும் கருணாநிதி நகர் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு கரு.நாகராஜன் கூறினார்.












Click it and Unblock the Notifications