தேர்தல் பணத்தை பதுக்கி வீடு கட்டும் விவகாரம்- எச். ராஜா மீதான புகார் குறித்து விசாரணை: எல். முருகன்
சென்னை: தேர்தல் செலவுக்கு கொடுத்த பணத்தை பதுக்கி பாஜக முன்னாள் தேசிய செயலாளர் பங்களா கட்டி வருவதாக கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க. 4 இடங்களில்தான் வென்றது. அதிமுக கூட்டணியில் இருந்ததால்தான் இந்த வெற்றியும் பா.ஜ.க.வுக்கு சாதகமானது.

எச். ராஜா தோல்வி
காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தோல்வி அடைந்தார். தமது தோல்வி தொடர்பாக பேசிய எச்.ராஜா, பாஜக நிர்வாகிகள் மீது சரமாரியாக குற்றம் சாட்டினார்.

எச்.ராஜாவுக்கு எதிராக ராஜினாமா
ஆனால் எச். ராஜாவின் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் பா.ஜ.க. தலைவர் உள்ளிட்ட பெரும்பாலான நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்து கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பினர். இது பா.ஜ.க.வில் பெரும் சர்ச்சையானது.

பணம் பதுக்கியதாக புகார்
அத்துடன் சட்டசபை தேர்தல் செலவுக்கு கொடுத்த பணத்தில் ரூ4 கோடியை எச். ராஜா பதுக்கி தற்போது பங்களா கட்டி வருகிறார் என்றும் ராஜினாமா செய்த நிர்வாகிகள் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக விசாரித்து எச். ராஜா மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

டெல்லி மேலிடம் கடும் அதிருப்தி
ஏற்கனவே சட்டசபை தேர்தல் தோல்வி தொடர்பாக தமிழக தலைவர்கள் மீது டெல்லி பாஜக மேலிடம் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. பெரும்பாலான இடங்களில் கட்சி நிர்வாகிகள் பிற கட்சிகளிடம் விலை போய்விட்டனர் என்கிற கோபமும் பாஜக மேலிடத்தில் இருந்து வருகிறது.

எச். ராஜா மீதான புகார் குறித்து விசாரணை
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகனிடம் எச். ராஜா மீதான ரூ4 கோடி பணம் பதுக்கல் புகார்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த முருகன், இந்த புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். எல்.முருகனின் இந்த கருத்து பா.ஜ.க.வில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications