ஊரக பகுதிகளில்.. 5 ஆயிரம் நீர் நிலைகளை புனரமைக்க பெரும் திட்டம்.. பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு
சென்னை: ஊரக பகுதிகளில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய சிறுபாசன ஏரிகள், குளங்கள் மற்றும் வரத்து கால்வாய்களை மேம்படுத்தி இயற்கையை மீட்டெடுக்கும் பெரும் முயற்சியாக ரூ. 500 கோடி மதிப்பீட்டில் மக்கள் பங்களிப்போடு 5 ஆயிரம் நீர் நிலைகளை மேம்படுத்தும் பெரும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்என் ரவி தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்ததால், சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கடந்த 15-ந் தேதி சட்டசபையில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார்.

இந்தநிலையில் சட்டப்பேரவையில் இன்று 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும். சரியாக காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது அவர், ரூ. 500 கோடி மதிப்பீட்டில் தலைசிறந்த அறிவியல் நிறுவனங்களின் வழிகாட்டுதலுடன் மக்கள் பங்களிப்போடு 5 ஆயிரம் நீர் நிலைகளை மேம்படுத்தும் பெரும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக தங்கம் தென்னரசு கூறியதாவது:- உள்ளாட்சி அமைப்புகளின் முதன்மையான பணியாக பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை முன்னிறுத்தி அத்திட்டத்தை பெரியார் வெற்றிகரமாக நடத்தியும் காட்டினார் என்பது நமக்கெல்லாம் பெருமை.
பெரியார் வழியில் நடைபெற்று கொண்டு இருக்கும் திராவிட மாடல் அரசு, கடந்த 3 ஆண்டுகளில் ஊரக பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு 46 லட்சம் குடிநீர் இணைப்புகளை வழங்கயுள்ளது. ஊரக பகுதிகளில் உள்ள பழைய நீர் தேக்க தொட்டிகளுக்கு பதிலாக 365 கோடி மதிப்பீட்டில் 2 ஆயிரம் புதிய நீர்தேக்க தொட்டிகள் இந்த ஆண்டு அமைக்கபடும். நாட்டிலேயே நகரமயமாக்கல் அதிகம் காணப்படுவது தமிழ்நாட்டில் தான்.
நகரமயமாதல் எனும் வளர்ச்சி பாதையில் சென்னை பெருநகர மாநகரட்சி உள்பட பெரிய மாநகராட்சிகளுக்கு தேவையான வசதியை செய்து கொடுக்க வேண்டியதன் அவசியத்தை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது. நீர் மேலாண்மையின் உச்சத்தை தமிழ் சமூகம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எட்டியுள்ளது. ஆனால் காலப்போக்கில் இந்த நீர் நிலைகள் பராமரிப்பு இன்றியும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியும் தன்னிலையை உணர்ந்து வருகின்றன.
இந்த சூழலில் ஊரக பகுதிகளில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய சிறுபாசன ஏரிகள், குளங்கள் மற்றும் வரத்து கால்வாய்களை மேம்படுத்தி இயற்கையை மீட்டெடுக்கும் பெரும் முயற்சியாக ரூ. 500 கோடி மதிப்பீட்டில் தலைசிறந்த அறிவியல் நிறுவனங்களின் வழிகாட்டுதலுடன் மக்கள் பங்களிப்போடு 5 ஆயிரம் நீர் நிலைகளை மேம்படுத்தும் பெரும் திட்டம் செயல்படுத்தப்படும்.












Click it and Unblock the Notifications