டெல்டா விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! ரூ.80 கோடியில் 4,964 கிலோமீட்டர் நீளம் கால்வாய் தூர்வாரல்!
சென்னை: டெல்டா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் கடைமடை வரை தூர் வார ரூ.80 கோடி தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் 4,964 கிலோமீட்டர் நீளம் கால்வாய் தூர்வாரப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
மொத்தத்தில் இந்த திட்டம் உட்பட நீர்வளத் துறைக்கு 7,338.36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் தாக்கல்
2022- 2023-ம் ஆண்டுக்கான தமிழக நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். ஒவ்வொரு துறைக்கும் தேவையறிந்து அதற்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். அந்த வகையில் விவசாயிகளுடன் மிகுந்த தொடர்புடைய துறையான நீர்வளத்துறைக்கு தமிழக பட்ஜெட்டில் 7,338.36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.

நிதி ஒதுக்கீடு
இந்த நிதி ஒதுக்கீடு குறித்து தமிழக சட்டமன்றத்தில் பி.டி.ஆர். வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது; ''வரும் குறுவை சாகுபடிக்கு கடைமடைப் பகுதிகள் வரை காவிரி நீர் சென்றடைய, டெல்டா பகுதியிலுள்ள 10 மாவட்டங்களில் 80 கோடி ரூபாய் செலவில் 4,964 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாய்களை தூர்வாரும் சிறப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்புதலை இந்த அரசு அளித்துள்ளது. இவ்வாண்டு முன்கூட்டியே திட்டமிடுதல் மூலம், பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பதற்கு முன்னரே இந்தப் பணிகள் துரிதமாக நிறைவேற்றப்படும்.''

நீர்வளத் துறை
நீர்வளங்களின் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்கவும், சிறப்பாக மேலாண்மை செய்வதற்காகவும், பாசனத்திற்காக நீரை தங்குதடையின்றி வழங்குவதற்காகவும், 3,384 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி வடிநிலப் பகுதியில் உள்ள பாசன அமைப்புகளில் நீட்டித்தல், புனரமைத்தல், நவீனமயமாக்குதல் போன்ற பணிகள் (ERM)விரைவில் தொடங்கப்பட உள்ளன. இம்மதிப்பீடுகளில் நீர்வளத் துறைக்கு 7,338.36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பயிர்க்கடன்
நாட்டிலேயே முதல்முறையாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விவசாயிகள் பயன்பெறும் அறிவிப்புகளை பட்ஜெட் தாக்கலின் போது அமைச்சர் பி.டி.ஆர். வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications