தேர்தலுக்கு ரூ.102.93 கோடி நிதி ஒதுக்கீடு: துணை முதல்வர் ஓபிஎஸ்; ஸ்டாலினுக்கு சபாநாயகர் பாராட்டு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நடத்த ரூ102.93 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக சட்டசபையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.
தமிழக சட்டசபை கூட்டத்தில் இன்று துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இறுதி துணை மதிப்பீடு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், சட்டசபை தேர்தலை நடத்துவதற்காக ரூ.102.93 கோடி தேவைப்படுகிறது. இது பொதுத்துறையின் மானிய கோரிக்கை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.
இறுதி துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.21,172.82 கோடி நிதியை ஒதுக்க வழிவகை செய்கிறது என்றார். இதனைத் தொடர்ந்து அதிமுக அரசின் 5 ஆண்டுகால சாதனைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுப் பேசினார்.

இந்த அரசின் கடைசி சட்டசபை கூட்டம் என்பதால் சபாநாயகர் தனபால் உரையாற்றினார். அந்த உரையில், சட்டசபை கூட்டம் நடைபெற்ற அனைத்து நாட்களிலும் சபைக்கு வந்த ஒரே முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்; மீண்டும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் 9 ஆண்டுகள் சபாநாயகர் பதவியில் இருந்திருக்கிறேன். இந்தியாவில் அதிக ஆண்டுகள் சபாநாயகர் பதவியில் இருந்த பெருமையை பெறுகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டார் என்றும் சபாநாயகர் தனபால் கூறினார். இதையடுத்து சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

எம்ஜிஆர், ஜெ. நினைவிடங்களில்...
இதனைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினர்.












Click it and Unblock the Notifications