தியாகப் பெருந்தகை வ.உ.சி. 150வது பிறந்த நாள்... தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் கொண்டாட்டம்!
சென்னை: விடுதலைப் போராட்ட வீரர் கப்பலோட்டி தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. சென்னையில் வ.உ.சிதம்பரனாரின் திருவுருவ படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
செல்வந்த குடும்பத்தில் பிறந்தாலும் தேச விடுதலைப் பணியில் ஈடுபட்டதால் வாழ்நாளின் கடைசிநாட்களை வறுமையில் கழிக்க வேண்டிய துயரில் இருந்தவர் வ.உ.சிதம்பரனார். ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசி கப்பலை இயக்கியதால் சிறைவாசம் அனுபவித்தார்; சிறையிலேயே செக்கிழுக்க வைக்கப்பட்டார்.

முதல்வரின் 14 அறிவிப்புகள்
தியாகப் பெருந்தகையான வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்தநாளை ஒட்டி, தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 14 அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதில், வ.உ.சி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வ.உ.சி.யின் 150வது பிறந்தநாளான இன்று, சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள வ.உ.சி உருவ சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

சென்னை துறைமுகத்தில்...
சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள வ.உ.சி. சிலையின் கீழே வைக்கப்பட்டிருந்த வ.உ.சி திருவுருவப்படத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, சிதம்பரனாரின் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய துண்டறிக்கையை அங்கிருந்தவர்களுக்கு வழங்கினார். முதல்வர் ஸ்டாலினைத் தொடர்ந்து, அமைச்சர்கள் கே .என் நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, எம்.பி.க்கள் ஆ.ராசா, தயாநிதிமாறன் உள்ளிட்டோரும் வ.உ.சி. திருவுருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

ஒட்டப்பிடாரம் நினைவகம்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சி. நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு தமிழக சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி.கீதாஜீவன், தமிழக மீன் வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,தூத்துக்குடி லோக்சபா தொகுதி எம்.பி. கனிமொழி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயகுமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி, தன் வாழ்நாளில் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக மட்டுமன்றி தமிழ் மொழிக்காக தமிழ் மொழியின் அடையாளத்திற்காக பாடுபட்ட வ.உ.சி சுயமரியாதை இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். தொடர்ந்து இந்திய மக்களுக்காக போராடிய பெரும் தலைவரான அவருடைய நினைவுகள் போற்றப்பட வேண்டும். அவர் வழியில் இந்த நாட்டின் அடையாளங்களை தமிழ்நாட்டில் நாம் பாதுகாப்போம் என்றார்.

அரசுக்கு கோரிக்கை
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா நெல்லை வருகை தந்தார். நெல்லை வண்ணாரப்பேட்டை சுற்றுலா மாளிகையில் வைத்து செய்தியாளர்களிடம் ஜவாஹிருல்லா கூறியதாவது: சுதந்திரப்போராட்ட வீரர் வ.உ.சி.யின் 150-வது பிறந்ததினத்தையொட்டி தமிழக அரசு 14 சிறப்பு அறிவிப்புகளை அறிவித்துள்ளது. வ.உ.சி.யின் வரலாற்றை எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் ஆவணப்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து சுதேசி நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தில் அப்போது ரூ2 லட்சம் மதிப்புள்ள 8 ஆயிரம் பங்குகளை வாங்கியவர் செயலாளராகவும் இருந்தவர் பக்கீர்முகமது ராவுத்தர், இவர்கள் குறித்த பதிவுகளும் வ உ.சியின் வாழ்கை வரலாற்றுடன் சேர்ந்து ஆவணமாக்க அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன் என்றார். திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வ.உ.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் தமிழகம் முழுவதும் இன்று பேரெழுச்சியுடன் வ.உ.சி.150வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.












Click it and Unblock the Notifications