முதல்வர் பழனிச்சாமி இன்று டெல்லி பயணம்.. பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் முக்கிய விஷயம் பேச திட்டம்
சென்னை: நாளை பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லிக்கு செல்கிறார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் செல்கிறார்கள். டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை தனியாக சந்தித்து பேச முதல்வர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பரபரப்பான சூழ்நிலையில், நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ராஜ்பவனில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென சந்தித்து பேசினார். அப்போது அமைச்சர் ஜெயக்குமார், தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரும் உடன் இருந்தனர். அப்போது நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்தும், தமிழக நிதி தேவை குறித்தும் முதல்வர் விளக்கியதாக தகவல்கள் வெளியானது.

இந்த சூழ்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லிக்கு பயணம் செய்கிறார். நாளை டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன், அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரும் டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதல்வர் பழனிச்சாமி, பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தனியாக சந்தித்து பேச நேரம் கேட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
அப்படி சந்தித்தா, தமிழக அரசியல் நிலவரம் குறித்து மோடி, அமித்ஷாபிடம் விளக்கம் அளிக்கக்கூடும் என்கிறார்கள். அத்துடன் தமிழகத்துக்கு மத்திய அரசு சார்பில் தர வேண்டிய சுமார் ₹40 ஆயிரம் கோடியை ஒவ்வொரு துறை சார்பில் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கவும் முதல்வர் திட்டமிட்டுள்ளார்.
தற்போது தமிழக அரசுக்கு டாஸ்மாக் மற்றும் வணிகவரித்துறை (ஜிஎஸ்டி) மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது, அவர்களுக்கு ஓய்வூதியம் கொடுப்பதற்கே சரியாக உள்ளது. இதனால் தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு பணம் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. அதனால், தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஆயோக் கூட்டம் மூலம் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளாராம்.












Click it and Unblock the Notifications