"பணிச்சுமை குறைப்பு".. முக்கிய வாக்குறுதியை கையில் எடுக்கும் இபிஎஸ்.. ஐடி ஊழியர்களை கவர திட்டம்!
சென்னை: ஐடி ஊழியர்களின் பணிச்சுமை மற்றும் வேலைப்பளுவை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அதிமுக அரசு எடுக்கும் என்று முதல்வர் பழனிச்சாமி சோழிங்கநல்லூர் பிரச்சாரத்தில் உறுதி அளித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதல்வர் பழனிசாமி தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதிமுக சார்பாக ஒற்றை ஆளாக மாநிலம் முழுக்க சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு கட்டமாக நேற்று சோழிங்கநல்லூரில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். கடந்த 10 ஆண்டுகளில் சென்னையில் குவிந்த முதலீடுகள், தொடங்கப்பட்ட நிறுவனங்கள் , உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்து முதல்வர் தனது பிரச்சாரத்தில் பட்டியலிட்டார்.

திமுக
சோழிங்கநல்லூர் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, சென்னைக்கு பல நலத்திட்டங்களை அதிமுக கொண்டு வந்துள்ளது. பொதுமக்களுக்கான கட்சி அதிமுக. திமுகவோ வெறும் ஒரு குடும்பத்திற்கான கட்சி. சோழிங்கநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் ஐடி பார்க்குகள் அதிகம் உள்ள பகுதி. முதல்வராக ஜெயலலிதா இருந்த போதே இங்கு பல ஐடி பார்க்குகளை கொண்டு வந்தார்.

வேலை வாய்ப்பு
இதனால் பல தொழிற்நிறுவனங்கள் இங்கே வந்தது. மக்களுக்கு இதனால் வேலை வாய்ப்பும் அதிகரித்தது. சோழிங்கநல்லூரில் ஐடி பார்க்க வர அடித்தளமாக இருந்தது அதிமுக,. இதனால் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்பட்டது. 2019ல் என்னுடைய தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் 3 லட்சத்து 500 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது.

ஒப்பந்தம்
300க்கும் அதிகமான தொழிற்சாலைகள் தொடங்க இதில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் கொரோனா வந்தது . ஆனாலும் கூட 60 ஆயிரம் கோடிக்கு தொழில்கள் தொடங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. தேர்தலுக்கு முன்பு கூட 28 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தொழில்கள் தொடங்க ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது.

வேலை கிடைக்கும்
படித்த இளைஞர்கள் 5 லட்சம் பேருக்கு இதனால் வேலை கிடைக்கும். இது போக மறைமுகமாக 5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். சென்னையில் தொழில்கள் பெருக சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதும், தொடர் மின்சாரமும் ஒரு முக்கிய காரணம். திமுக ஆட்சியில் இதற்கெல்லாம் உத்தரவாதம் இல்லை. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஐடி பணியாளர்களின் நலன்கள் மீது கவனம் செலுத்துவோம்.

பிரச்சாரம்
ஐடி ஊழியர்களின் பணி நேரம் மற்றும் வேலை பளுவை சீரமைப்பதில் கவனம் செலுத்துவோம். அவர்களின் பணி சுமையை குறைப்பதற்கான திட்டங்களை கொண்டு வருவோம். சென்னையில் புதிய முதலீடுகளை கொண்டு வந்து வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று முதல்வர் பழனிசாமி தனது பிரச்சாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பணிச்சுமை
ஐடி ஊழியர்களின் பணிச்சுமை குறித்து இதுவரை பெரிய அளவில் கட்சிகள் பேசியது கிடையாது. ஆனால் இந்த முறை முதல்வர் பழனிசாமி அதை கையில் எடுத்துள்ளார். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்ற கேள்வி எழுந்தாலும்.. அதிகரித்து வரும் பணிச்சுமையை மனதில் வைத்து முதல்வர் பழனிசாமி, ஐடி ஊழியர்களை கவரும் வகையில் இந்த வாக்குறுதியை அளித்துள்ளார். தேர்தல் சமயத்தில் அதிமுகவிற்கு இந்த வாக்குறுதி கண்டிப்பாக உதவும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications