சிறுவன் தினேஷ் மரணம் அதிர்ச்சி தருகிறது: அவரின் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வேன்: முதல்வர் வருத்தம்
சென்னை: விழுப்புரத்தில் கொடி கம்பம் நடும் போது மின்சாரம் தாக்கி சிறுவன் தினேஷ் பலியானது அதிர்ச்சியை தருகிறது, உடனே பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் திருமண விழா ஒன்றில் திமுக கொடி நட்ட சிறுவன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் - மாம்பழப்பட்டு சாலையில் பொன்குமார் என்பவரின் இல்ல திருமண விழாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் பங்கேற்க வந்த அமைச்சர் பொன்முடியை வரவேற்பதற்காக கொடி நட்ட தினேஷ் என்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலியானார்.
சாலை ஓரத்தில் திமுக கொடியை நடும் போது மேலே சென்ற மின்சார வயரில் கொடி கம்பம் சிக்கி தினேஷ் உடலில் ஷாக் அடித்து பரிதாபமாக உயிர் இழந்தார். தினேஷின் இந்த மரணம் தமிழ்நாட்டை உலுக்கி உள்ளது. இதையடுத்து பேனர், கட்சி அலங்கார வரவேற்பு கலாச்சாரத்திற்கு எதிராக மீண்டும் பலர் குரல் எழுப்பி வருகிறார்கள்.

இரங்கல்
இந்த நிலையில் பேனர் கலாச்சாரத்திற்கு எதிராக பேசிய முதல்வர் ஸ்டாலின் சிறுவன் தினேஷின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். பல முறை இதற்காக தொண்டர்களிடம், நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்து இருக்கிறேன். கழக நிகழ்ச்சிக்காக பேனர்கள், வரவேற்பு வளைவுகள் வைக்க கூடாது.

ஆடம்பரம்
இதற்கான சாலையில் அலங்கார பணிகள் எதையும் செய்ய கூடாது என்று கூறி இருக்கிறேன். கட்சி அலங்கார ஆடம்பரங்களைப் பலமுறை கண்டித்த பின்னும் இப்படி நடப்பது வருத்தம் அளிக்கிறது. இதுபோன்ற விரும்பத்தகாத - கண்டிக்கத்தக்க செயல்கள் தொடர்வது என்னை வருத்தமடைய வைக்கிறது. விழுப்புரத்தில் கொடி கம்பம் நடும் போது மின்சாரம் தாக்கி சிறுவன் தினேஷ் பலியானது அதிர்ச்சியை தருகிறது.

அதிர்ச்சி
13 வயதான தினேஷை இழந்து வாடும் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வதெனத் தெரியவில்லை. தினேஷை இழந்து தவிக்கும் குடும்பத்தாரின் துயரில் பங்கேற்று துணைநிற்கிறேன். உயிரை குடிக்கும் பேனர் கலாச்சாரத்தை உடனே நிறுத்துங்கள். இனி யாரும் பேனர் கலாச்சாரத்தால் மரணிக்க கூடாது.

முற்றுப்புள்ளி
பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் எனது வேண்டுகோளை திமுகவினர் உடனடியாக பின்பற்ற வேண்டும். என்னுடைய இந்த வேண்டுகோளை திமுகவினர் கட்டளையாக ஏற்று செயல்படுத்த வேண்டும். இனி எங்கும் இதுபோன்ற மரணங்கள் நடக்காமல் தடுப்பதே உண்மையான அஞ்சலி, என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications