இந்தி மாநிலம் போதும், இந்திய மாநிலங்கள் வேண்டாமா? - அமித்ஷாவுக்கு ஸ்டாலின் காட்டமான கேள்வி
சென்னை: ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
Recommended Video
டெல்லியில் நடைபெற்ற 37 வது நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழு கூட்டத்தில் தலைமையேற்று பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியின் அவசியம் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.
அதில், "அரசை நடத்துவதற்கான அலுவல் மொழியாக இந்தியை பயன்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்து உள்ளார். நிச்சயமாக இது இந்தி மொழியின் முக்கியத்துவத்தை உயர்த்தும்.

9 ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம்
மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டு உள்ளது. 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவை கட்டாயம் வழங்க வேண்டும். வட மாநிலங்களில் இருக்கும் 9 பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள் பேச்சு வழக்காக இந்திக்கு மாறி இருக்கின்றனர். 8 வட மாநிலங்களும் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்க சம்மதம் தெரிவித்து இருக்கின்றன.

ஆங்கிலத்துக்கு பதில் இந்தி
அலுவல் மொழியான இந்தி மொழியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கியமான அங்கமாக மாற்றுவதற்கான நேரம் இது. இந்தி மொழியை நாம் கொண்டு வருவது உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை கற்க வேண்டும். பல்வேறு மொழிகளை பேசும் மாநில மக்கள் தங்களுக்கு இடையே உரையாடும்போது இந்தியில் பேச வேண்டும்." என்றார்.

அமித்ஷாவின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
அமித்ஷாவின் இந்த கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இது அப்பட்டமான இந்தி மொழி திணிப்பு என சமூக வலைதளங்களில் பொதுமக்களும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அமித்ஷாவின் பேச்சுக்கு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் தனது பதிவில், "'ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்" என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்! இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது.

திரும்பத் திரும்ப செய்கிறீர்கள்
'இந்தி மாநிலம்' போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித்ஷா நினைக்கிறாரா? ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது! ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது! ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்!" " எனக் #StopHindiImposition என்ற ஹேஷ்டேக்குடன் குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications