தமிழகத்தில் ஜூன் 7 வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் வருகிற ஜூன் 7-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஜூன் மாதம் முதல் நியாய விலை கடைகளில் 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முழு ஊரடங்கு
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக வருகிற 31.5.2021 வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஜூன் 7 வரை நீட்டிப்பு
இந்த ஊரடங்கு வரும் 1.5.2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில் நோய் தொற்றின் தன்மையை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய் தொற்று பரவாமல் தடுத்து மக்களின் விலை மதிப்பற்ற உயிர்களை காக்கும் நோக்கத்திலும் இந்த முழு ஊரடங்கு 7.6.2021 காலை 6 மணி வரை மேலும் ஒரு வார காலத்துக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

காய்கனி விற்பனை
பொதுமக்களின் அத்தியாவசிய அன்றாட தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்து வரும் நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து நடைபெறும். மேலும் மளிகை பொருட்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள மளிகை கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் அனுமதியுடன் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்யவும், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.

13 மளிகை பொருட்கள் விற்பனை
இதுதவிர பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலை கடைகள் மூலம் வரும் ஜூன் மாதம் முதல் வழங்கிட கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பொதுமக்கள் அவசியமின்றி வீட்டில் இருந்து வெளியில் வருவதையும், கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications