9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் எப்போது?.. அமைச்சர்களுடன், முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை...7 மாநிலங்களில் சதமடித்தது - மும்பையில் 1 லிட்டர் ரூ. 103
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கு கடந்த டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது.
9 மாவட்டங்களில் தேர்தல் இல்லை
அப்போது மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த 9 மாவட்டங்களிலும் வார்டு மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடத்தப்படாமல் இருந்ததால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 6 மாதம் அவகாசம் அளிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.
முதல்வர் ஆலோசனை
இந்த நிலையில் நீதிமன்றம் உத்தரவை அடுத்து உள்ளாட்சி தேர்தலை நடத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊராட்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் கலந்து கொண்டார்.
விரைவில் அறிவிப்பு?
உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் எந்த தேதியில் தேர்தல் நடத்துவது? இந்த கொரோனா சூழலில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது சாத்தியமா? என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.