முதல்வர் ஸ்டாலினை திடீரென சந்தித்த கே.எஸ்.அழகிரி.. ஆலோசனை வழங்கியதாக பரபரப்பு பேட்டி!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியால் செய்ய முடியாததை, முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்து காட்டுகிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் 18 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள்.
அப்போது தங்களுடைய ஒரு மாத ஊதியம் 18 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அவர்கள் அளித்தனர்.

கொரோனா பணிகள்
இதனை தொடர்ந்து நிருபர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அவர்களின் ஒருமாத ஊதியத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர். தமிழ்நாட்டில் திமுக பொறுப்பேற்றது முதல் கொரோனா நிவாரண பணிகளை மிக சிறப்பாக செய்துள்ளது.

மாபெரும் சாதனை
தமிழ்நாடு அரசு பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைத்துள்ளது. அதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொண்டோம். இது மாபெரும் சாதனை. இந்திய மக்கள் போற்றும் சாதனைதான் இது. பிரதமர் நரேந்திர மோடியால் செய்ய முடியாததை முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்துள்ளார்.

சிறப்புமிக்க தீர்மானங்கள்
மத்திய அரசு தான்தோன்றித்தனமாக கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோல் குடியுரிமை திருத்த சட்டங்களை எதிர்த்தும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேற்றபட்ட இந்த தீர்மானங்கள் அனைத்தும் பேராண்மை மிக்கவை.

சந்தேகம் இல்லை
கிராமப்புற சாலைகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளோம். இது தவிர பல்வேறு ஆலோசனைகளையும் முதல்வருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வழங்கினோம். சட்டமன்ற தேர்தலைபோல், தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

அ.தி.மு.க குற்றச்சாட்டு
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தவறுகள் நடக்க வாய்ப்பு இருப்பதாக அ.தி.மு.க தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளது என்று நிருபர்கள் கே.எஸ்.அழகிரியிடம் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த அவர், 'இந்த ஆட்சி அ.தி.மு.க ஆட்சியை போல் கிடையாது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் தவறுகள் நடக்க வாய்ப்பில்லை' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications