ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம்- கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் தொடர்பாக ஆட்சிப் பணி விதிகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொள்ளும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்; இந்த நடவடிக்கையானது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது; மாநில சுயாட்சிக்கும் எதிரானது என தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் பாணியில் மத்திய அரசுக்கு மமதா பதிலடி- மாநில விழாவில் டெல்லி நிராகரித்த அலங்கார ஊர்தி!
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு பணிகளுக்கு மாற்ற மாநில அரசுகளின் ஒப்புதல் கட்டாயம் தேவை. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு பணிக்கு எடுத்து கொள்ள முடியாது.
மாநில அரசு அதிகாரம் பறிப்பு
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் விவகாரத்தில் மாநில அரசுகளுக்கான வீட்டோ அதிகாரமாக இருந்து வருகிறது. இதனை மாற்றுவதற்கு மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பியது. அதில் மத்திய அரசின் ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டிருந்தது.
மமதா எதிர்ப்பு
இதற்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி முதன் முதலாக கலகக் குரல் எழுப்பினார். பிரதமர் மோடிக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பிய மமதா பானர்ஜி, கூட்டாட்சியை சிதைக்கும் நடவடிக்கை என்றார். இதேபோல் மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களும் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளன.
முதல்வர் ஸ்டாலின் கடிதம்
தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் மத்திய அரசின் இந்த முயற்சியை விமர்சித்தனர். இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
சுயாட்சி, கூட்டாட்சிக்கு எதிரானது
மேலும், மத்திய அரசு, ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கையானது மாநில சுயாட்சிக்கும் கூட்டாட்சி தத்துவத்துக்கும் எதிரானது; இந்த திருத்தங்கள் மூலம் மத்திய அரசிடமே அனைத்து அதிகாரங்களும் குவிய வழி ஏற்படும். ஏற்கனவே மாநில அரசுகளில் போதிய எண்ணிக்கையில் அதிகாரிகள் இல்லாத நிலை உள்ளது. தற்போது மத்திய அரசு பணிகளுக்கு அதிகாரிகளை அனுப்பினால் மாநில அரசு நிர்வாகம் முடங்கும் எனவும் முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார்.