"நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்”.. அண்ணாவின் அந்த வாசகத்தை.. டிவிட்டரில் முழங்கிய ஸ்டாலின்.. கெத்து
சென்னை: தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தின் பயோவில், "நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசியல் வரலாற்றின் அடித்தளத்தை உருவாக்கியவர் அறிஞர் அண்ணா. இந்தியா முழுக்க பல மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்தாலும் தமிழகத்தில் அக்கட்சி காலூன்ற முடியாமல் தவிப்பதற்கு அண்ணா அமைத்து கொடுத்த வலுவான அடித்தளமே காரணம்.
அண்ணாவின் அரசியலை ஒதுக்கிவைத்துவிட்டு தமிழக அரசியலில் எதையும் நினைத்து கூட பார்க்க முடியாது. திராவிடம் என்ற கொள்கையை தமிழர்களின் டிஎன்ஏ வரை கொண்டு சென்றவர்தான் அண்ணா. அப்படிப்பட்ட அண்ணாவைதான் முதல்வராக பதவி ஏற்ற அடுத்த நொடியே மு. க ஸ்டாலின் நினைவு கூர்ந்துள்ளார்.

ஸ்டாலின்
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், "நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்" என்று பயோவில் குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலத்தில் "I belong to the Dravidian stock" என்று டிவிட்டரில் முதல்வர் ஸ்டாலின் மாற்றியுள்ளார். ஸ்டாலினின் இந்த பயோவிற்கு பின் மிகப்பெரிய அரசியல் பின்னணி உள்ளது. அண்ணா தெரிவித்த இந்த வாசகத்தை ஸ்டாலின் பயன்படுத்தி உள்ளது தமிழர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

என்ன சொன்னார்
1962ல் ராஜ்யசபாவில் திமுக சார்பாக அறிஞர் சிஎன் அண்ணாதுரை முதல்முதலாக பேசிய போது குறிப்பிட்ட வாசகம்தான் "I belong to the Dravidian stock". அறிஞர் அண்ணா தனது ராஜ்யசபா உரையில், இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் திராவிட நாட்டில் இருந்து நான் வந்து இருக்கிறேன். நான் திராவிட இனத்தை சேர்ந்தவன். என்னை திராவிடன் என்றே அழைப்பேன்.

திராவிடன்
என்னை திராவிடன் என்று அழைப்பதில் நான் பெருமை கொள்கிறேன். இதன் அர்த்தம், நான் வங்காளிகளுக்கோ, மகாராஷ்டிரா மக்களுக்கோ, குஜராத்திகளுக்கோ எதிரானவன் என்பது இல்லை. திராவிடர்களிடம் அழுத்தமான வரலாறு உள்ளது, திராவிடம் வித்தியாசமானது, திராவிடர்களுக்கான சுயநிர்ணய உரிமையே எங்களின் கோரிக்கை, என்று அறிஞர் அண்ணா அன்று ராஜ்யசபாவில் முழங்கினார்.

அதே வாசகம்
தற்போது அதே அண்ணாவின் வாசகத்தைதான் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று கூறி பதவி ஏற்ற ஸ்டாலின், தற்போது அண்ணாவின் வாசகத்தை நினைவு கூர்ந்து உள்ளார். அண்ணா, கருணாநிதியின் வழியில் தான் செல்வேன் என்பதை ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications