போட்டுடைத்த ஸ்டாலின்.. “ஆர்எஸ்எஸ் விரும்பும் சர்வாதிகார ஆட்சியமைக்க பாஜக முயற்சி” -மோடி மீது அட்டாக்
சென்னை: ஆர்.எஸ்.எஸ். விரும்பும் சர்வாதிகார ஆட்சியை அமைக்க பாஜக முயற்சித்து வருவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா என்ற பெயரில் தனி இணையதளம் தொடங்கி ஆடியோக்களை வெளியிட்டு வருகிறது. இது யூடியூப், பாட்காஸ்ட் தளங்கள் போன்றவற்றில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த வகையில் இன்று, "மாநில சுயாட்சி: உண்மையான கூட்டுறவு கூட்டாட்சிக்கான எனது குரல்" என்ற தலைப்பின் கீழ் ஸ்பீக்கிங் ஃபார் இந்தியாவின் 3 வது எபிசோடை பேசி இருக்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.

அதில் அவர் கூறி இருப்பதாவது, "இந்தியா கூட்டணியிடம் இந்தியாவை ஒப்படைக்க வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். மாநில சுயாட்சி கொள்கை வெற்றி பெறுவதற்கு இந்தியா கூட்டணி ஆட்சியில் அமர வேண்டும். பாரதிய ஜனதா கட்சி ஆர்.எஸ்.எஸ். விரும்புகிற சர்வாதிகார ஆட்சியை அமைக்க முயற்சிக்கிறது. பாஜக இந்தியாவின் ஜனநாயக அமைப்பையே சிதைக்கிறது. நமது 2 வது எபிசோடில் சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட பாஜக அரசின் 7 மெகா ஊழலை பற்றி பேசி இருந்தேன்.
அதை உண்மை என மத்திய அரசு ஒப்புக்கொள்ளும் விதமாக ஒரு விசயத்தை செய்து உள்ளார். இந்தியா முழுவதும் இந்த ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா உரை சென்றடைந்த பிறகு, அக்டோபர் 2 வது வாரத்தில் ஒரு செய்தி வந்தது. பாஜக அரசின் ஊழலை வெளிகொண்டு வந்த சிஏஜி அதிகாரிகள் செப்டம்பர் 12 ஆம் தேதியே கூண்டோடு இடமாற்றம் என்ற செய்தி அது. எவ்வளவு வேகம்.
#Speaking4India Episode – 3
— M.K.Stalin (@mkstalin) October 31, 2023
➡️ மாநில சுயாட்சிக்கான இன்றைய தேவை குறித்து தமிழ்நாட்டின் குரல்!
➡️ எபிசோட் 2-இன் ரீச்சும், ஒன்றிய அரசின் ரியாக்ஷனும்!
➡️ மாநில முதலமைச்சராக ஆதரவு பேச்சும் – பிரதமரானவுடன் எதிர்ப்பும்!
➡️ மாநில நிர்வாகத்தை முடக்கிட, ஆளுநர் மாளிகை?
➡️ மினி… pic.twitter.com/iuSm9slnIz
திமுக தனக்கென்று தனித்துவமான கொள்கைகளுடன் 75 வது ஆண்டை கொண்டாடும் கட்சி மட்டும் அல்ல. இன்று நாடாளுமன்றத்தில் இந்தியாவின் 3வது பெரிய கட்சியாக இருந்து இந்திய ஜனநாயகத்தை காக்க போராடும் கட்சியும் ஆகும். அப்படிப்பட்ட திமுகவின் கொள்கைகளில் முக்கியமானது மாநில சுயாட்சி. இந்தியா கூட்டாட்சி தன்மை கொண்ட நாடு. இங்கு பல்வேறு இனங்கள், பண்பாடுகள் பழக்க வழக்கங்களை கொண்ட மக்கள் வாழ்கிறார்கள். நம் மக்களிடம் ஏராளமான சமய நம்பிக்கைகள் உள்ளன. பல்வேறு வழிபாட்டு முறைகள் உள்ளன. அவர்களுக்கென அரசியல் சட்ட உரிமைகள் இருக்கிறது.
இத்தனை வேறுபாடுகளை கடந்து நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்கிறோம். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியா பல்வேறு அழகிய மலர்கள் நிரம்பிய அற்புதமான பூந்தோட்டம். எனவேதான் நம் நாட்டின் நிர்வாக அமைப்பை உருவாக்கியவர்கள் ஒற்றை தன்மை கொண்ட நாடாக இல்லாமல் கூட்டாட்சி நிர்வாகம் கொண்ட நாடாக மாநிலங்களின் ஒன்றியமாக மாற்றினார்கள். நமது பிரதமர் இதற்கு முன் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தார். அப்போதெல்லாம் மாநில உரிமைகளுக்கு ஆதரவாக நிறைய பேசினார்.
பிரதமராகி டெல்லிக்கு வந்தவுடன் அரசியலமைப்பு சட்டத்தின் முதல் வரியே அவருக்கு பிடிக்காமல் போய்விட்டது. அந்த வரி என்னவென்றால் இந்தியா என்ற பாரத் மாநிலங்களின் ஒன்றியம் என்பது. மாநில முதலமைச்சராக இருந்த சமயத்தில் மாநில உரிமை பற்றி பேசிய பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் அதை பறிக்க முயல்கிறார்." என்று தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications