ஆட்சியில் பங்கு குறித்து பேச்சுவார்த்தை? கனிமொழியிடம் கிரிஷ் சோடங்கர் பேசியது என்ன?
சென்னை: திமுக எம்பி கனிமொழியை சந்தித்த தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், என்ன பேசினோம் என்பது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பி கனிமொழியை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சந்தித்து பேசினார். அவருடன் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் உடனிருந்தார்.

இந்த சந்திப்பு முடித்துக் கொண்டு வெளியே வந்த கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இன்னும் இறுதியாகவில்லை, இறுதியானதும் உங்களுக்கு சொல்கிறோம்.
அது போல் ஆட்சியில் பங்கு குறித்து தற்போதைக்கு திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ராஜ்யசபா சீட், உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் கனிமொழியுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். இவ்வாறு கிரிஷ் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இருக்கும் காங்கிரஸ் கட்சி, தற்போது கூடுதல் சீட், ஆட்சியில் பங்கு, உள்ளாட்சி தேர்தலில் 20 சதவீதம் இடம், ராஜ்யசபா சீட் உள்ளிட்டவைகளை கேட்டு வருகிறது. ஆனால் ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்தில் சாத்தியமில்லை என முதல்வர் ஸ்டாலின் ஒரு நிகழ்வில் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிகவும் இணைந்துள்ளது. அக்கட்சியும் இரட்டை இலக்கத்தில் கேட்டு வருகிறது. தற்போது காங்கிரஸ் கூடுதல் சீட் கேட்பதால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் கூடுதல் சீட் கேட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று இரவு சென்னை வந்திருந்தார். அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டில் ஆலோசனை நடத்தியிருந்தார்.
அந்த ஆலோசனையில் முதல்வர் ஸ்டாலின், கனிமொழி, கே.சி. வேணுகோபால், காங்கிரஸ் கட்சியின் சிங் தியோ ஆகிய 4 பேர் மட்டுமே இருந்தனர். ராகுல் காந்தி முக்கியமான ஒரு விஷயத்தை ஸ்டாலினிடம் சொல்லுமாறு கே.சி.வேணுகோபாலிடம் சொல்லியதாக தெரிகிறது.
இதற்காகத்தான் இந்த ஆலோசனை கூட்டத்தில் செல்வப்பெருந்தகையும் இல்லை, சோடங்கரும் இல்லை. அப்படி என்ன முக்கியமான விஷயம் பேசினார் என தெரியவில்லை. மேலும் சோனியா ஏதோ கடிதம் கொடுத்ததாகவும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் சோடங்கர், கனிமொழியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியோ 30 இடங்களை கேட்டு வருகிறது. அது போல் ராஜ்யசபா எம்பி சீட், அதுவும் தற்போது நடைபெறும் தேர்தலின் போதே கொடுத்துவிடுமாறு கேட்டு வருகிறது. இதனால் திமுக என்ன செய்வது என தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications