அவருக்கு நான் பதில் சொல்றதே கிடையாதே.. பெரியார் குறித்த சீமான் விமர்சனத்துக்கு உதயநிதி நறுக்
சென்னை: தந்தை பெரியார் குறித்த நாம் தமிழர் கட்சியின் சீமான் விமர்சனங்கள் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அவருக்கு நான் பதில் சொல்றதே கிடையாது என ஒரே வரியில் பதிலடி தந்தார் திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின். மேலும் தந்தை பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியின் சீமான் அண்மைக்காலமாக தந்தை பெரியாரை மிக இழிவாகப் பேசி வருகிறார். தந்தை பெரியார்தான் தமிழரின் எதிரி; தமிழ்ச் சமூகத்தை சீர்திருத்தியவர் அல்ல- சீரழித்தவர்; திராவிடத்தின் வேரான பெரியாரை வெட்டி வீழ்த்தாமல் ஓயமாட்டேன்; விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன்தான் பெரியார் தமிழருக்கு எதிரி என எனக்கு கற்பித்தவர் என்றும் சீமான் மேடைகளில் இடைவிடாமல் பேசி வருகிறார்.

சீமானின் இந்த பேச்சுகள் பெரியார் தொண்டர்களையும் திராவிட கட்சிகளையும் கடும் அதிர்ச்சி அடைய வைத்தது. சீமானுக்கு எதிராக 100-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னை, மதுரை, ஈரோடு உள்ளிட்ட பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு சீமான் கொடும்பாவியும் எரிக்கப்பட்டன.
ஆனாலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சீமான், பெரியாரை இழிவுபடுத்தி பேசினார். சீமானின் இந்த விமர்சனங்களுக்கு ஆளும் திமுக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகியவை கடுமையான எதிர்வினைகளை வெளிப்படுத்தவில்லை என்பதும் பெரியார் தொண்டர்களின் குமுறல்.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், டெல்லிக்கு தமிழ்நாட்டில் இருந்து என்சிசி மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டது தொடர்பாக விவரித்தார். அப்போது சென்னையில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றார்.
மேலும், இது பெரியார் மண் அல்ல.. பெரியாரே ஒரு மண்ணுதான் என்று சீமான் பேசியது தொடர்பாகவும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, அவருக்கு நான் பதில் சொல்றதே இல்லை என்று கடந்து சென்றார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications