நிறைவு பெறும் பரப்புரை! மாலை 6 மணிக்கு மேல் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்! தேர்தல் அதிகாரி விளக்கம்!
சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்திருக்கின்றன. இந்நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவடைகின்றன. மாலை 6 மணிக்கு மேல் அமலுக்கு வரும் விதிமுறைகள் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை 234 தொகுதிகளுக்கும் ஏப்.23ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. எனவே, தொகுதி வாரியாக தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்காக பிரச்சாரம் மேற்கொள்ள, டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னை வந்திருந்தார்.
ஏன் ஸ்டாலினுக்காக பிரச்சாரம் செய்கிறேன் என்பது குறித்து பேசிய அவர், "டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, நாங்கள் செய்த அனைத்து நல்ல பணிகளையும் அவர்கள் முழுமையாகச் சிதைத்துவிட்டனர். அந்த கசப்பான அனுபவங்களை நான் இங்குள்ள மக்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஸ்டாலின் மீண்டும் ஒருமுறை மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார்.
ஸ்டாலின் எனது நண்பர், எனது சகோதரரை போன்றவர். இருப்பினும் நான் அவருக்காக பிரச்சாரம் செய்ய வந்திருக்க காரணம், அவர் தமிழ்நாட்டிற்கு செய்திருக்கும் பணிகள்தான்" என்று கூறியிருந்தார். நேற்று சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் ரோடு ஷோவில் பங்கேற்று அவர் வாக்கு சேகரித்திருந்தார்.
அதேபோல, காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக தீவிர பரப்புரை மேற்கொண்டிருந்தார். மறுபுறம் தவெக தலைவர் விஜய் சென்னையிலும், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியிலும் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தனர்.
மறுபுறம் அதிமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அவருடைய சொந்த தொகுதியான எடப்பாடியிலும், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி வேட்டபாளர்களை ஆதரித்து சென்னையில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் தீவிர பரப்புரை மேற்கொண்டிருந்தனர்.
இப்படி இருக்கையில் மாலை 6 மணியுடன் அமலுக்கு வரும் தேர்தல் விதிமுறைகள் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கமளித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள்
பிரசாரம் நிறைவடைந்தவுடன், தொகுதிக்கு சம்பந்தமில்லாத அரசியல் கட்சியினர் மற்றும் வெளியூர் நபர்கள் மாலை 6 மணிக்குள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
வாட்ஸ்அப், முகநூல் (Facebook), எக்ஸ் (X) மற்றும் தொலைக்காட்சிகளில் பிரச்சாரம் செய்யவோ அல்லது விளம்பரம் செய்யவோ கூடாது. இந்த விதிமுறைகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். வாக்குப் பதிவு முடியும் வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும்.
வாக்காளர்களை வாக்களிக்க அழைத்து செல்வதற்கும், திரும்ப கொண்டு வந்து விடுவதற்கும், முகவர்கள் தங்கள் வாகனங்களை பயன்படுத்த கூடாது போன்ற விதிமுறைகள் மாலை 6 மணிக்கு அமலுக்கு வரும் என்று தேர்தல் அதிகாரி அறிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications