மனோஜ் பாண்டியன் vs அப்பாவு.. ராதாபுரம் தொகுதியில் களமிறங்கும் பனங்காட்டுப்படை.. சைலண்டான ஹரி நாடார்!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் பனங்காட்டுப்படை கட்சியின் வேட்பாளர் ஹரி நாடார் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு 37 ஆயிரம் வாக்குகளை பெற்றது திமுகவின் தோல்விக்கு காரணமாக அமைந்த சூழலில், இம்முறை பனங்காட்டுப்படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா நேரடியாக ராதாபுரம் தொகுதிக்கு மாறப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் அப்பாவுவுக்கு எதிராக ஸ்கெட்ச் போடுவதாக பார்க்கப்படுகிறது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், தென் மாவட்டங்களில் ஒவ்வொரு தொகுதியிலும் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கின்றன. கடந்த முறை ஆலங்குளம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்ட மனோஜ் பாண்டியன் வெற்றி பெற்றார். திமுக சார்பாக போட்டியிட்ட பூங்கோதை தோல்வி அடைந்தார்.

இந்த தொகுதியில் திமுகவின் தோல்விக்கு பனங்காட்டுப்படை கட்சியின் வேட்பாளர் ஹரி நாடார் காரணமாக அமைந்தார். ஏனென்றால் ஆலங்குளம் தொகுதியில் ஹரி நாடார் போட்டியிட்டு சுமார் 37 ஆயிரம் வாக்குகளை கைப்பற்றினார். இது பூங்கோதையின் தோல்விக்கு நேரடி காரணமாக மாறியது. இம்முறை திமுக சார்பாகவே மனோஜ் பாண்டியன் நேரடியாக போட்டியிட உள்ளார்.
இதனால் ஆலங்குளம் தொகுதியில் பனங்காட்டுப்படை கட்சி போட்டியிட வேண்டாம் என்று மனோஜ் பாண்டியன் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இன்னொரு பக்கம் பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜா தொகுதி மாறுவதற்கான பணிகளில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
முதலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட தயாரான ராக்கெட் ராஜா, இப்போது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தி வருகிறார். ராதாபுரம் தொகுதியில் இருக்கும் சமூக வாக்குகளை தன் பக்கம் கொண்டு வர வேண்டும் என்ற அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக இம்முறை ராதாபுரம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. இதனால் பனங்காட்டுப்படை கட்சி பிரிக்கும் வாக்குகள் பாஜகவுக்கு சாதகமாக மாறக்கூடும் என்று கணக்கிட்டுள்ளது. இது அப்பாவுவுக்கு நேரடி செக்காக அமைந்துள்ளது. ராதாபுரம் தொகுதியில் பனங்காட்டுப்படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா போட்டியிட்டால், திமுக வாக்குகள் பிரியும் நிலை இருக்கிறது.
இன்னொரு பக்கம் அப்பாவு தோல்வி அடைந்தால், சபாநாயகர் பதவியை தாம் எட்டிவிட முடியும் என்று மனோஜ் பாண்டியன் தரப்பும் கணக்கு போட்டுள்ளது. ஏற்கனவே மனோஜ்பாண்டியனின் தந்தை பிஎச் பாண்டியன் சபாநாயகராக இருந்திருக்கிறார். இதனால் தென் மாவட்ட அரசியல் கூடுதல் பரபரப்பாக மாறி இருக்கிறது.












Click it and Unblock the Notifications