வீடுகளில் அதிகமாக மின்சாரம் பயன்படுத்தினால் வர்த்தக பிரிவின்படி பில் வருமா? மின் வாரியம் விளக்கம்!
சென்னை: ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் வர்த்தக பிரிவின்படி மின் கட்டணம் வசூலிக்கப்படும் என பரவும் தகவல் உண்மையல்ல, சமூக வலைதளங்களில் பரவும் தகவலை நம்ப வேண்டாம் என தமிழ்நாடு மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
வீட்டு மின் இணைப்புகளில் ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால், வணிக நிறுவனங்கள், தொழில்ற்சாலைகளுக்கு வசூலிக்கப்படுவது போல அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் உண்மையில்லை என்று தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பயன்பாட்டில் உள்ள மின் இணைப்புகளில் வீட்டு மின் இணைப்புகள் 2.42 கோடி மட்டுமே. தமிழ்நாட்டில் தற்போது மின் கட்டணம் 2 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது. வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் மின் கட்டணம் கடந்த ஜூலை 1ஆம் தேதி உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஆண்டுக்கு 3,600 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால், வீட்டு மின் இணைப்புகளுக்கு வணிக நிறுவனங்களுக்கு வசூலிக்கப்படுவது போல, வர்த்தக பிரிவின்படி மின்சார கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் பரவியுள்ளது. இந்நிலையில், அது தவறான தகவல் என தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 9 லட்சத்து 92 ஆயிரத்து 601 பேர் மட்டுமே 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துகின்றனர். இது மொத்த வீட்டு இணைப்புகளில் 4.08 சதவீதம் மட்டுமே. மற்ற 96 சதவீதம் பேர் குறைவாகவே மின்சாரம் பயன்படுத்துகின்றனர். 100 யூனிட் வரை எந்த வித கட்டணமும் இல்லை என்பது தொடர்கிறது. சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மையில்லை என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications