மீனவர்கள் கைது.. இலங்கை மீது தூதரக நடவடிக்கை தேவை.. மத்திய பாஜக அரசுக்கு பாமக வலியுறுத்தல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மீனவர்களை தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்து வரும் இலங்கை அரசுக்கு எதிராக தூதரக நடவடிக்கைகளை மத்தியில் ஆளும் பாஜக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 14 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ள இலங்கைக் கடற்படை, அவர்களின் இரு படகுகளையும் பறிமுதல் செய்திருக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் சிங்களக் கடற்படையினர் தொடர்ந்து இத்தகைய அத்துமீறலில் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

tamilnadu fishermen srilanka pmk

2025-ஆம் ஆண்டு தொடங்கி இன்றுடன் 41 நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில், இதுவரை 77 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சொந்தமான 7 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு நாட்டுடைமையாக்கபட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டில் 530 மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், 71 மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இப்போது கைது செய்யப்பட்டவர்களையும் சேர்த்து மொத்தம் 111 மீனவர்கள் இலங்கை சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குச் சொந்தமான 218 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதும், அதற்கு நிரந்தரத் தீர்வு காணாமல் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதும் மீனவர்கள் நலனுக்கும், இந்திய இறையாண்மைக்கும் எந்த வகையிலும் வலு சேர்க்காது. இந்த சிக்கலுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கடந்த ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி இந்தியா - இலங்கை ஆகிய இரு நாடுகளின் மீனவர்கள் நலனுக்கான கூட்டுப் பணிக்குழு கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. அப்போது மீனவர்கள் கைது செய்யப்படுவது அவர்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டது என்பதால் இந்த சிக்கலை மனித நேயத்துடன் அணுகுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, இரு நாட்டு மீனவர் அமைப்புகளின் பேச்சுகளுக்கு விரைவாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டதை இலங்கைத் தரப்பு ஏற்றுக் கொண்டது. ஆனால், அதன்பின் 100 நாட்களுக்கு மேலாகியும் இந்த இரு வாக்குறுதிகளையும் இலங்கை அரசு இன்று வரை நிறைவேற்றவில்லை.

தமிழக மீனவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை அரசுடன் இந்திய அரசு பேச வேண்டும். மீனவர்கள் நலன் தொடர்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி இலங்கை அரசு இந்தியா வலியுறுத்த வேண்டும். அதையும் மீறி தமிழக மீனவர்களுக்கு எதிரான செயல்களில் இலங்கை அரசு ஈடுபட்டால் அதன் மீது தூதரக நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+