'ஓ.. இதுக்கு பெயர்தான் சொல்லாததையும் செய்வதோ '.. முதல்வர் மு.க. ஸ்டாலினை பங்கமாய் கலாய்த்த ஓ.பி.எஸ்
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு மக்களுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ. ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது:-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது என்றாலும், 2020 ஆண்டிலிருந்து நிதி உதவியும் அளிக்கப்பட்டு வருகிறது.

ரூ.2,500 நிதி உதவி
2020-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பரிசு தொகுப்புடன் 1,000 ரூபாய் நிதி உதவி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டது. இதற்கென 2,363 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2021-ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2,500 ரூபாய் நிதி உதவி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டது.

‘சொல்லாததையும் செய்வோம்’
இதற்கென 5,604 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டது. ஆனால் 'அதை செய்கிறேன், இதை செய்கிறேன்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க. ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படும் நிதி உதவியை கைவிட்டுவிட்டது.
'நடைமுறையில் இருக்கும் திட்டத்தை கைவிடுவோம்' என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாததை தி.மு.க. அரசு செய்திருக்கிறது. இதற்கு பெயர்தான் 'சொல்லாததையும் செய்வோம்' என்பது போலும்.

எளிய மக்களின் எதிர்பார்ப்பு
இதன் மூலம் சென்ற ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி மக்களுக்கு அளிக்கப்பட்ட 5,604 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியுதவியுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு தற்போது வெறும் 1,088 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுவிட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அளிக்கப்பட்டு வந்த நிதி உதவியை நிறுத்துவது என்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல் ஆகும். ரூ.2,500 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அளிக்கப்படுகின்ற நிதியுதவி தொடர்ந்து அளிக்கப்பட வேண்டுமென்பதே ஏழை, எளிய மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்
புதிதாக எதையும் நடைமுறைப்படுத்தவில்லை என்றாலும், ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற திட்டத்தையாவது தொடர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, ஏழை, எளிய மக்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு அளிக்கப்பட்டு வந்த நிதியுதவியான 2,500 ரூபாயை தொடர்ந்து அளிக்கத் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications