செப். 7 முதல்.. தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் போகலாம்.. பஸ், ரயில் போக்குவரத்துக்கு அனுமதி
சென்னை: செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கிடையே அரசு, தனியார் பேருந்து போக்குவரத்தை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழக மக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் 7-ஆம் தேதி முதல் மாநிலத்துக்குள் பயணிகள் ரயில்களை இயக்கவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் 4. 30 லட்சத்திற்கும் மேலானோர் அவதிப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் 7ஆவது கட்டமாக இந்த மாதம் வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடைகளின் விற்பனை நேரம்
எனினும் பொது போக்குவரத்து தொடக்கம், கடைகளின் விற்பனை நேரம் அதிகரிப்பு உள்ளிட்ட தளர்வுகளையும் அளித்துள்ளது. பொது போக்குவரத்தை பொருத்த மட்டில் 50 சதவீதம் பேருந்து மாவட்டத்திற்குள்ளேயே இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.

போக்குவரத்து தொடக்கம்
இது நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதில் பொதுமக்கள் சிரமப்பட்டதாகவும் மாவட்டங்களுக்கிடையே பொது போக்குவரத்தை தொடங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

தனியார் பேருந்து
இதையடுத்து வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி மாவட்டங்களுக்கிடையே அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

வாழ்வாதாரம்
மாண்புமிகு அம்மாவின் அரசு, கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும், பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளித்துள்ளது. இந்த வகையில் தற்போது, தமிழ்நாட்டில், மாவட்டத்திற்குள்ளான பொது பேருந்து போக்குவரத்து, அனைத்து வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் தரிசனம், வணிக வளாகங்கள், தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, இந்த ஊரடங்கு உத்தரவானது ஒரு சில கட்டுப்பாடுகளுடன் 30.9.2020 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

பேருந்து போக்குவரத்து
தமிழ்நாட்டில் தற்போது மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு முக்கிய பணி மற்றும் வியாபாரநிமித்தமாக சென்று வர பொதுமக்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, நிலையான வழிகாட்டுநடைமுறைகளை பின்பற்றி 7.9.2020 முதல்தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கிடையேயும் அரசு மற்றும் தனியார் பொது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

ரயில் போக்குவரத்து
மேலும், அனுமதிக்கப்பட்ட தடங்களில் மாநிலங்களுக்கு இடையேயானஇரயில் போக்குவரத்திற்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி ), தற்போது 7.9.2020 முதல் மாநிலத்திற்குள் பயணியர் இரயில் போக்குவரத்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

முகக் கவசம்
பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அரசு பல்வேறு தளர்வுகளைஅறிவித்தாலும், பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது, வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவது, வெளியிடங்களில் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிப்பது உள்ளிட்ட அரசு அறிவித்த பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றினால், இந்த நோய்த் தொற்று பரவாமல் தடுக்க முடியும். எனவே பொதுமக்கள் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் உள்ளது.












Click it and Unblock the Notifications