பழைய ஓய்வூதிய திட்டம்... தமிழக அரசு எதிர்பார்க்காத ட்விஸ்ட்... அரசு ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு
சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதற்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஜனவரி) 6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
முன்னதாக கோரிக்கைகள் தொடர்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் வருகிற 22-ந்தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்கள். 2004ம் ஆண்டு முடிவுக்கு வந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அதன்பிறகு வந்த எந்த அரசும் தயாராக இல்லை. பழைய ஓய்வூதிய திட்டம் அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்மைகளை அளித்தது. ஆனால் புதிய ஓய்வூதிய திட்டம் அவர்களுக்கு போதிய பயனுள்ளதாக இல்லை. இதனால் தான் போராடி வருகிறார்கள். திமுக கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் பழைய ஒய்வூதியம் குறித்து குழு அமைத்து பரிசீலிப்போம் என வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து 4.5 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் நிறைவேற்றவில்லை.
இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஜனவரி) 6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். முன்னதாக கடந்த டிசம்பர் 13-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். இதற்காக முறைப்படி நோட்டீசும் வழங்கியிருக்கிறார்கள்.
இந்த சூழலில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளுடன் வருகிற 22-ந் தேதி கோரிக்கைகள் குறித்து அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதி , அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கயல்விழி செல்வராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். ஆனால் சுமூக முடிவு எட்டப்படவில்லை.
இந்த சூழலில்' அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (போட்டா ஜியோ) கூட்டம் சென்னை திருவல்லிக்கேணி நீலி வீராசாமி தெருவில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைமை அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு போட்டா ஜியோ மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் த.அமிர்தகுமார் தலைமை வகித்தார். இதில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு நிர்ணயத்தில் 21 மாத நிலுவைத்தொகையினை வழங்க வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில் 5 சதவீதத்துக்கு மேல் பணிநியமனம் செய்யக்கூடாது என்பதை ரத்து செய்திட வேண்டும்.
தலைமைச் செயலகம் முதல் அனைத்து துறைகளிலும் உள்ள அனைத்து பிரிவு காலிப் பணியிடங்களையும் நிரப்பி, பதவி உயர்வினையும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த தீர்மானங்களில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகளை அரசின் கவனத்தை ஈர்த்திட வரும் 29-ந்தேதி அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாலை 5.45 மணிக்கு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஜனவரி 6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications