அரசு ஊழியர்கள் இன்று செய்ய போகும் சம்பவம்.. தடுத்து நிறுத்த தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு
சென்னை: இன்று தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது முக்கியமான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துகிறார்கள். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ (JACTO-GEO) இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்த தமிழக அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. அரசு ஊழியர்களின் வருகையை காலை உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர்களுக்கு, தமிழக அரசின் தலைமைச்செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

பழைய ஓய்வூதியம்
தற்போது அமலில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (Contributory Pension Scheme - CPS) ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme - OPS) அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய வேண்டும். பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துகிறார்கள்.
தற்செயல் விடுப்பு போராட்டம் ஏன்
இந்த தற்செயல் விடுப்பு போராட்டம் காரணமாக, பெரும்பாலான அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் சேவை பெறும் இடங்களிலும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்த போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, அரசு ஊழியர்களுடன் அரசு பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தியது. ஆனால் இதுவரையில் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. இதன் காரணமாகவே, இந்தப் போராட்டம் இன்று நடக்கிறது. இந்நிலையில் இந்த போராட்டத்தை தடுக்க அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் தலைமை செயலாளர் சுற்றறிக்கை
தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் கலெக்டர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறுகையில், "தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி சில அரசு ஊழியர் சங்கங்களின் உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக 11-ந் தேதி (இன்று) ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுக்கப்போவதாக தீர்மானித்துள்ளது தெரிகிறது.
அரசு ஊழியர்கள் வருகை
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க விதிப்படி, எந்தவொரு சங்கமும் தங்களது உறுப்பினர்களை ஒட்டு மொத்தமாக தற்செயல் விடுப்பு எடுக்க வற்புறுத்தக்கூடாது. இதனை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்கள் வருகையை உறுதி செய்யும் வகையில் அவர்களது வருகையை பதிவு செய்து அதுதொடர்பான பதிவேட்டை காலை 10.30 மணிக்குள் சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள் மற்றும் கலெக்டர்களுக்கு துறைகளின் பிரிவு அதிகாரிகள் அனுப்பி வைக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications