இ-பதிவு முறையில் ஏதும் சந்தேகங்கள் இருக்கிறதா?.. '1100' என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழையுங்கள்!
சென்னை: இ-பதிவு குறித்த சந்தேகங்களை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக, 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 34,875 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது.. 365 பேர் உயிரிழந்தனர்.
கடந்த இரண்டு நாட்களாக தினசரி பாதிப்பில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்து மோசமான சாதனையை படைத்துள்ளது தமிழகம்.
புதிய நிபந்தனைகளுடன் திருமண நிகழ்வுக்கு இ-பதிவு முறை சேர்ப்பு.. என்னென்ன நிபந்தனைகள் முழு விவரம்
தமிழகத்தில் ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த 14 நாள்கள் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மருந்து கடைகள் முழுமையாக திறக்கப்படும். காய்கறி, மளிகை கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே இயங்கி வருகிறது. மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. மக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றுவதை தவிர்க்க இ-பதிவு முறை கொண்டு வரப்பட்டது.
இ-பதிவு முறை
சென்னையை பொறுத்தவரை ஒரு காவல் நிலைய எல்லை பகுதியில் இருந்து அடுத்த காவல் நிலைய எல்லை பகுதிக்கு செல்ல வேண்டுமானால் இ-பதிவு செய்திருக்க வேண்டும். மற்ற மாவட்டங்களை பொறுத்தவரை ஒரு மாவட்டத்தில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வதற்கு இ-பதிவு கேட்கப்பட்டது. இ-பதிவு இல்லாதவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை.
நிறைய சந்தேகங்கள்
இந்த இ-பதிவு முறையில் நிறைய சந்தேகங்கள், குழப்பங்கள் நிலவின. மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர் ஆகியோரிடம் போலீசார் இ-பதிவு கேட்பதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து இவர்களுக்கு இ-பதிவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. திருமண நிகழ்வுகளுக்கு இ-பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
திருமண நிகழ்வுகளுக்கு இ-பதிவு
இதனால் எராளமானோர் இதனையே காரணமாக வைத்து பதிவு செய்து தேவையில்லாமல் வெளியே சென்றாதால் இ-பதிவில் இருந்து திருமண நிகழ்வு நீக்கப்பட்டது. பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திருமண நிகழ்வு இ-பதிவு முறையில் சேர்க்கப்பட்டது. இதுபோல் பல்வேறு குழப்பங்களும், சந்தேகங்களும் மக்களுக்கு எழுந்து வந்தது.
சந்தேகங்கள் கேட்கலாம்
இந்த நிலையில் இ-பதிவு குறித்த சந்தேகங்களை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக, 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 1100 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு மக்கள் தங்கள் சந்தேகங்களை கேட்கலாம். அதிகாரிகள் இந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்வார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.