கஜா புயல்.. 4 மாவட்ட மருத்துவமனைகளில் இலவச ஸ்கேன் பரிசோதனை
சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டிசம்பர் 15-ஆம் தேதி வரை ஸ்கேன் பரிசோதனை செய்ய கட்டணம் வசூலிக்க கூடாது என தமிழக சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கஜா புயல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரையை கடந்தது. அப்போது 7 மாவட்டங்களில் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. அப்போது மரங்களும் மினஅ கம்பங்களும் முறிந்து விழுந்தது.
இந்நிலையில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு இன்னும் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. மரங்கள் சாய்ந்ததாலும், வீட்டு சுவர்கள் இடிந்து விழுந்ததாலும் மக்களில் சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

வீட்டுச் சுவர்
இதற்கு சிகிச்சைக்கு செல்பவர்களிடம் ஸ்கேன் எடுப்பதற்கு அரசு மருத்துவமனைகள் கட்டணம் வசூலிப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. அதுபோல் புதுக்கோட்டையில் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு மூதாட்டி மீது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

நிர்வாகம்
இதில் அவரது காலில் முறிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டபோது அவரிடம் ஸ்கேன் எடுக்க மருத்துவமனை நிர்வாகம் பணம் கேட்டதாக மூதாட்டி குற்றம்சாட்டினார்.

மக்கள் குற்றச்சாட்டு
புயலுக்கு பிறகு டெல்டா மாவட்டங்களில் உணவுக்கே நிவாரண பொருட்களை நம்பி உள்ள நிலையில் ஸ்கேன் பரிசோதனை கட்டணத்துக்கு எங்கே செல்வது என மக்கள் குற்றம்சாட்டினர்.

தமிழக அரசு
இதையடுத்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்க வரும் நோயாளிகளிடம் கட்டணம் ஏதும் வசூலிக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications