பொங்கி எழுந்த தமிழக அதிகாரிகள்.. சிலந்தி அணை கட்டுவதற்கு காவிரி ஆணைய கூட்டத்தில் கடும் எதிர்ப்பு!
சென்னை: சிலந்தி ஆற்றில் கேரளா அரசு தடுப்பணை கட்டுவதற்கும், மேகதாதுவில் கர்நாடகா தடுப்பணை கட்டுவதற்கும் காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகாவில் பெருகுடா என்ற இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டி வருவது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. திருப்பூர், கரூர் மாவட்டங்களில் வேளாண் பாசனத்திற்கும், பல லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாக அமராவதி ஆற்றுப்படுகை விளங்குகிறது.

சிலந்தி தடுப்பணை: இந்த அமராவதி அணைக்கு நீர் ஆதாரமாக திகழும் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டி வருகிறது. இதனால் அமராவதி அணைக்கான நீர்வரத்து முற்றிலும் தடுக்கப்பட்டு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என பாசன விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கு கேரளா அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துமாறு தமிழ்நாடு விவசாயிகள் போராடி வருகின்றனர். சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் கேரள அரசின் முயற்சியை தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வலியுறுத்தி உள்ளனர்.
அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிலந்தி ஆற்றில் கேரளா அரசு தடுப்பணையைக் கட்டிவிட்டால், அமராவதி அணைக்கு தண்ணீர் வருவது பாதிக்கப்படும். அந்த பாசனத்தை நம்பியிருக்கும் விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே, சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டுவதை உடனே திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் சிலந்தி அணையின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்டுவதை விமர்சித்துள்ளனர்.
காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு கொதிப்பு: இந்நிலையில், சிலந்தி ஆற்றில் கேரளா அரசு தடுப்பணை கட்டுவதற்கும், மேகதாதுவில் கர்நாடகா தடுப்பணை கட்டுவதற்கும் காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகளின் கோரிக்கைகள் உள்பட 8 விவகாரங்களை தமிழ்நாடு அரசு அதிகாரிகள் காவிரி ஆணைய கூட்டத்தில் எழுப்பி உள்ளனர். காவிரி ஆற்றுப் படுகையில் கொண்டு வரப்படும் சிறிய நீர்ப்பாசன திட்டங்களை ஆணையம் கண்காணிக்க வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வழக்கு: இதற்கிடையே சிலந்தி ஆற்றில் கேரளா அரசு தடுப்பணை கட்டுவது தொடர்பாக செய்தித் தாள்களில் வெளியான செய்தியை அடுத்து தானாக முன்வந்து தென்மண்டல பசுமைத்தீர்பாய நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, சத்யகோபால் அமர்வு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இதனை அடுத்து கேரள அரசுக்கு அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல், தேசிய வன விலங்குகள் வாரியத்திடம் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது. அனுமதி பெறப்படவில்லை என்றால் உடனடியாக அணை கட்டுவதை நிறுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக தமிழக அரசு வழக்கறிஞரிடம் இந்த அணை கட்டப்படுவதால் தமிழகத்திற்கு என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறும் கூறி இந்த வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications