ஆளுநர் தேநீர் விருந்துக்கு தவெகவுக்கு அழைப்பு.. இந்த முறை விஜய் பங்கேற்பாரா?
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்துக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் விஜய் பங்கேற்காத நிலையில் இந்த முறை பங்கேற்பாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.
ஆண்டுதோறும் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் தமிழக ஆளுநர் மாளிகையான கிண்டி ராஜ் பவனில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இந்த தேநீர் விருந்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உட்பட தமிழக அரசியல் கட்சிகள் பங்கேற்கும்.

இந்தநிலையில் நாளை மறுநாள் சுதந்திர தினத்தையொட்டி நடைபெறும் தேநீர் விருந்துக்கு தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்கின்றன.
திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். கடந்த ஆண்டு திமுக கட்சி சார்பில் ஆளுநர் விருந்தை புறக்கணித்தபோதும், தமிழக அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆண்டு புறக்கணிப்பு தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வமாக திமுக சார்பில் அறிவிக்கப்படவில்லை.
இந்தநிலையில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு, தேநீர் விருந்தில் கலந்துகொள்ளுமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், தவெக தலைவர் விஜய் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்பாரா இல்லையா என இன்னும் அக்கட்சி அறிவிக்கவில்லை.
கடந்த ஜனவரி மாதம் குடியரசு தின தேநீர் விருந்துக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்ற அடிப்படையில் தவெக-வை அழைப்பதாக ஆளுநர் மாளிகை தெரிவித்தது. அந்த விருந்தில் விஜய் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த முறை விஜய் பங்கேற்பாரா அல்லது தவெக சார்பில் வேறு யாரேனும் பங்கேற்பார்களா எனும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாஜகவை கொள்கை எதிரி என்றும் திமுகவை அரசியல் எதிரி எனும் விமர்சித்து விஜய் என்ன முடிவு எடுப்பார் என அரசியல் அரங்கில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications