ஆன்மீக பயணம் போகும் ஆளுநர் ரவி.. இன்று திருவண்ணாமலை செல்கிறார்! விவசாயிகள், மாணவர்களுடன் சந்திப்பு
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று 2 நாள் பயணமாக திருவண்ணாமலைக்கு செல்ல உள்ளார்.
தமிழ்நாடு ஆளுநராக பதவி வகித்து வரும் ஆர்.என்.ரவி, பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் பல்கலைக்கழக நிகழ்வுகள், அரசு நிகழ்வுகளில் தொடர்ந்து கலந்துகொண்டு பேசி வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் ஆன்மீக பயணமாக திருவண்ணாமலைக்கு செல்ல இருக்கிறார்.

2 நாள் பயணமாக திருவண்ணாமலை செல்லும் அவர், இன்று பகல் 12.30 மணியளவில் சாதுக்களையும், ஆன்மீக குருக்களையும் சந்தித்து பேச உள்ளார். அதை தொடர்ந்து திருவண்ணாமலையை சேர்ந்த வள்ளலார் சன்மார்க்க சங்கத்தின் இயற்கை விவசாயிகளை சந்தித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துகிறார்.
இன்று மாலை ரமணாசிரமத்துக்கு செல்லும் ஆளுநர் ரவி, யோகிராம் சுரத்குமார் ஆசிரமத்துக்கு பயணிக்கிறார். அதை தொடர்ந்து திருவண்ணாமலை கோயிலில் இரவில் கிரிவலம் செல்ல உள்ளார். இன்றைய நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னர் நாளை காலை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார்.
அதை தொடர்ந்து ஆளுநர் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்களை சந்தித்து ஆளுநர் ரவி உரை நிகழ்த்துகிறார். அதை தொடர்ந்து ஜவ்வாது மலைக்கு செல்லும் அவர், அங்குள்ள பழங்குடியின அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாற்றுகிறார்.
இறுதியாக செஞ்சிக் கோட்டைக்கும், வெங்கடரமணா ஆலயம் செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி அங்கிருந்து நேராக சென்னைக்கு திரும்ப உள்ளார். ஆளுநர் ரவியின் இந்த 2 நாள் பயணத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications