"நாய்க்கறி உண்பவர்களா?” இழிவுசெய்வதை ஏற்க முடியாது.. RS பாரதிக்கு எதிராக வரிந்து கட்டி வந்த ஆளுநர்!
சென்னை: நாகாலாந்து மக்கள் நாய்க்கறி உண்பவர்கள் என ஆர்.எஸ்.பாரதி பேசியிருந்த நிலையில், நாகா இன மக்களை அவர் இழிவுபடுத்துவதாக கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி, கருணாநிதி நூற்றாண்டு விழா கூட்டம் ஒன்றில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக விமர்சித்து பேசினார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசை வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பதாகவும், தமிழ்நாடு அரசு அனுப்பும் மசோதாக்களை கிடப்பில் போடுவதாகவும் குற்றம் சாட்டினார்.

நாகாலாந்திலே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நடந்தது என்ன தெரியுமா? ஊரை விட்டே விரட்டியடித்தனர். தப்பா நினைத்துக்கொள்ளக்கூடாது, ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன். நாகாலாந்து மக்கள் நாய்க்கறி உண்பார்கள், அவர்களே அங்கு ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை அனுப்பிவிட்டார்கள், அப்போது உப்பு போட்டு திண்ணும் தமிழர்களாகிய நாம் என்ன செய்வோம் என ஆவேசமாகப் பேசினார் ஆர்.எஸ்.பாரதி.
இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில், நாகாலாந்து மக்களை பகிரங்கமாக இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது என கண்டனம் தெரிவித்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாக தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நாகா இன மக்கள் துணிச்சல் மிக்கவர்கள், நேர்மையானவர்கள். கண்ணியமானவர்கள். அவர்களை திமுகவின் ஆர்.எஸ்.பாரதி 'நாய் கறி உண்பவர்கள்' என பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது, ஏற்க முடியாதது. மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது என பாரதியை வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
திமுக அரசு - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஆளுநர், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது, திமுகவின் கொள்கையை விமர்சிப்பது போன்ற போக்கால் சட்டமன்றம் வரை எதிரொலித்த இந்த மோதல், தற்போது நீதிமன்றப் படி ஏறியுள்ளது. இதற்கிடையே தான், தற்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications