ஊரடங்கை பயன்படுத்தி கொள்ளை.. தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை
சென்னை: 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு என்ற சூழலை பயன்படுத்தி இன்று, நாளை தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
போக்குவரத்து ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காகவும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தவும், 10.05.2021 காலை 04.00மணி முதல் 24.05.2021 காலை 4.00 மணி வரை இருவாரங்களுக்கு மாநிலம் முழுவதும் ஊரடங்கினை அமல்படுத்திட முதல்வர் ஆணையின் படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
வேலுமணி மீது வழக்கு போட்டவர்.. உளவுத்துறை ஏடிஜிபியான டேவிட்சன் தேவாசீர்வாதம்.. அதிரடி பின்னணி!
முழு ஊரடங்கு 10.05.2021 முதல் அமல்படுத்தப்டவிருப்பதை முன்னிட்டு, பொது மக்களும், தனியார் துறை தொழில் நிறுவனங்களும் மற்றும் வணிக நிறுவனங்களு நமக்குத் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்வதற்காக 08.05,2021(சனிக்கிழமை) மற்றும் 09.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு தினங்களிலும் அனைத்து கடைகளும், தொழில் நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் வழக்கம் போல் காலை 6.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிக கட்டணம் கூடாது
மேலும் மேற்கொண்ட இரு தினங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக அனைத்து வகையான போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையினை பயன்படுத்தி தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவுறுத்தி உள்ளார். அவ்வாறு வசூலிப்பது கண்டறியப்பட்டால் கீழ்கண்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் போக்குவரத்துத் துறையால் எடுக்கப்படும்.
6மாதம் சிறை
மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 192-a ன்படி அனுமதி சீட்டின் நிபந்தனைகளை மீறிய குற்றத்திற்காக ரூ.10000 வரை அபராதம் மற்றும் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்.
வாகனம் பறிமுதல்
மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 207ன் கீழ் வாகனம் சிறை பிடிக்கப்பட்டு தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 421ன் கீழ் அருகில் உள்ள காவல் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டு வழக்கு தொடரப்படும்.
அரசு எச்சரிக்கை
எனவே தனியார் பேருந்து, ஆம்னி பேருந்த உரிமையாளர்கள் இந்த பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்காக சேவை மனப்பான்மையோடு செயல்பட்டு, குறைவான கட்டணம் மட்டும் வசூலித்து வாகனங்களை இயக்குமறு உத்தரவிடப்படுகிறது. மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறி கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.