புத்தகப்பை இல்லா தினத்தை திடீரென ரத்து செய்த தமிழக அரசு.. என்ன காரணம் தெரியுமா? முக்கிய தகவல்
சென்னை: புத்தகப்பை இல்லா தினம் கடைப்பிடிக்கப்படும் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ள பள்ளிக்கல்வித் துறை, அதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் பெரும்பாலான நாட்கள் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே மாணவர்களுக்குப் பள்ளி, கல்லூரிகள் நடத்தப்பட்டு வந்தன.
இதனால் மாணவர்கள் மன ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். மேலும், ஆன்லைன் கல்வியால் கல்வி கற்பதிலும் பாகுபாடு ஏற்படுவதாகக் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

பள்ளிகள்
மேலும், கொரோனா குறையத் தொடங்கியதும் மிக விரைவாகப் பள்ளிகளைத் திறந்து, நேரடி கல்வி முறையை ஆரம்பிக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர். இந்தச் சூழலில் ஓமிக்ரான் அலையும் முழுமையாகக் கட்டுக்குள் வந்த நிலையில், கடந்த பிப். 1ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க மாநில அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த வாரம் முதல் தமிழகம் முழுக்க பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

புத்தகப்பை இல்லா நாள்
கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட அழுத்தத்தைப் போக்கும் வகையில் முதலில் மன ரீதியான பயிற்சிகள் அளிக்கப்பட்ட பின்னரே, பாட வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்தச் சூழலில், தமிழ்நாட்டில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி புத்தகப்பை இல்லா நாள் (No Bag Day) கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் பாடச்சுமையைக் குறைக்கும் வகையிலும், மன அழுத்தங்களைக் குறைக்கும் வகையிலும் இந்த புதிய திட்டம் இருக்கும் எனக் கூறப்பட்டது.

விமர்சனம்
அன்றைய தினம் வாழ்க்கைக்குத் தேவையான கல்வி, வாழ்க்கையின் அனுபவம் ஆகியவை குறித்துத் தெரிந்து கொள்ள மாணவர்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்குக் கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்தனர். அதேநேரம் ஏற்கனவே அதிக நாட்கள் நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை என்பதால் இந்த புத்தகப்பை இல்லா நாள் பாடங்களை முடிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும் எனச் சிலர் விமர்சித்தனர்.

ரத்து
இந்தச் சூழலில் புத்தகப்பை இல்லா தினம் கடைப்பிடிக்கப்படும் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கோவிட்-19 பெருந்தொற்று காரணத்தினால் பள்ளிகள் தற்போதுதான் திறக்கப்பட்டுச் செயல்பட்டு வருவதால் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளைச் சரி செய்யவும் மற்றும் கற்றல் அடைவுத் திறன்களை மேம்படுத்தவும் வேண்டியுள்ளதால் 2802.2022 அன்று நடைபெறவிருந்த செயல்பாடு ரத்து செய்யப்படுகிறது என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications